Namvazhvu
Pope Francis helps வறிய நாடுகளுக்கு திருத்தந்தையின் அவசரக்கால நிதி உதவிகள்
Thursday, 28 May 2020 03:20 am
Namvazhvu

Namvazhvu

மே 27, 2020- நம் வாழ்வு:  கோவிட் 19 நெருக்கடி நிலையையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய அவசரக்கால நிதி உதவிகள், பாகிஸ்தான், பங்களாதேஷ், லிபேரியா, கொலம்பியா உட்பட பல நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்று பீதேஸ் செய்தியொன்று கூறுகிறது.

பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகள் என்ற அமைப்பினரின் உதவியோடு வழங்கப்பட்டு வரும் இவ்வுதவிகள், பாகிஸ்தானில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் கிறிஸ்தவ மக்களை சென்றடைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் நாட்டின் தலைநகர் டாக்காவில், மக்கள் தொகை மிக அதிகமாக இருப்பதோடு, அங்கு வாழும் தினக்கூலி தொழிலாளர்களின் நிலை, கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் திருத்தந்தையின் நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.

மொரோக்கோ நாட்டின் ராபாத் (Rabat) உயர் மறைமாவட்டத்தில், தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மிக வறிய மக்களுக்கு, அங்கு பணியாற்றும் ஏழ்மை கிளாரா அருள் சகோதரிகள் சபையினரின் உதவியோடு, திருத்தந்தையின் நிதி உதவி வழங்கப்பட்டு வருவதாக பீதேஸ் செய்தி கூறியுள்ளது.