Namvazhvu
ஒன்றிப்பின் வழியே, இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்ற...
Wednesday, 27 Jan 2021 05:36 am
Namvazhvu

Namvazhvu

ஒன்றிப்பின் வழியே, இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்ற...

ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி முடிய சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், ஜனவரி 18 ஆம் தேதி திங்கட்கிழமையன்று  துவங்குவதைக் குறித்து, ஜனவரி 17 ஆம் தேதி ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் நினைவூட்டினார்.

இணைய வலைத்தொடர்பு வழியாக, ஜனவரி 18 முதல் இடம்பெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், சனவரி 25 ஆம் தேதி சிறப்பிக்கப்படும் திருத்தூதர் பவுலின் மனமாற்றத் திருநாளன்று, உரோம் நகரின் புனித பவுல் பெருங்கோவிலில், கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் திருப்புகழ் மாலை வழிபாட்டுடன் நிறைவுக்கு வரும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.
“என் அன்பில் நிலைத்திருங்கள், மற்றும், நீங்கள் மிகுந்த கனிதரும்பொருட்டு” (யோவா. 15: 5-9) என்ற தலைப்பு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்திற்கென

எடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஒப்புரவும், ஒன்றிப்பும் நிலவ, கிறிஸ்தவ சமுதாயத்தினர் இறைவேண்டல் எழுப்பி, ஒன்றிப்பு குறித்த இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்ற உழைப்போம் எனவும்  அழைப்புவிடுத்தார்.

மோதல்களைவிட மிக உயர்ந்தது ஒன்றிப்பு என்பதையும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.
மேலும், கத்தோலிக்கர்களுக்கும் யூத மதத்தினருக்கும் இடையே உரையாடல்களை ஊக்குவித்து ஆழப்படுத்தும் 32வது ஆண்டு நிறைவு நாள் சிறப்பிக்கப்படுவதைப் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் இந்த முயற்சிகள், ஒத்துழைப்பு, மற்றும், உடன்பிறந்த நிலைகளின் கனிகளைக் கொணரட்டும் என்ற ஆவலையும் வெளியிட்டார்.