Namvazhvu
தென்சூடான் திருத்தூதுப்பயணம் அன்னை மரியாவுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை
Thursday, 09 Feb 2023 09:25 am
Namvazhvu

Namvazhvu

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் தென்சூடான் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பயணத்தின்போது தனக்குப் பாதுகாப்பாக இருந்தமைக்காக அன்னை மரியாவிற்கு நன்றி தெரிவித்தார் .

பிப்ரவரி 5,  ஞாயிறன்று, உரோமில் உள்ள புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்கு சென்று காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் தென்சூடான் நாடுகளில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது தனக்குத் துணையிருந்து வழிநடத்திய அன்னைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி கூறினார்.

அவ்வாறே ஜனவரி 31, செவ்வாயன்று, தனது நாற்பதாவது திருத்தூதுப்பயணத்தைத் தொடங்குவதற்கு முந்தைய நாள், அதாவதுஜனவரி 20, திங்கள்கிழமை, மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பயணத்தை அன்னைமரியாவிடம் ஒப்படைத்து செபிப்பதற்காக இப்பெருங்கோவிலுக்குச் சென்றார்.

அன்னை மரியாவின் மீது தனிப்பற்று கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி திருஅவையின் தலைமைப்பொறுப்பை ஏற்றதற்கு அடுத்தநாள், புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று அன்னை மரியாவின் படத்திற்கு முன் செபித்துவிட்டுத் திரும்பினார். அதேவண்ணம், அவர், ஒவ்வொரு முறையும், திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பும், பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியதும், அன்னையின் திருப்படத்திற்குமுன் செபிப்பதை தன் வழக்கமாகக் கொண்டுள்ளார்.