Namvazhvu
கர்தினால் பியத்ரோ பரோலின் “Flame" இளையோர் கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி
Monday, 13 Mar 2023 12:25 pm
Namvazhvu

Namvazhvu

கடவுளின் தாயாம் அன்னை மரியா போல இறைத்திட்டத்திற்கு விரைந்து செயல்படவேண்டும் என்றும், நீதியைப் பின்தொடர்ந்து பொதுவான நன்மைகளான, ஏழைகளுக்கு அன்பு, சமூக நட்பு போன்றவற்றின் வழியாக சாட்சியமுள்ள வாழ்வு வாழவும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

மார்ச் 4, சனிக்கிழமையன்று வெம்ளே என்னுமிடத்தில் உள்ள ஓவோ அரேனா OVO Arena, என்னும் இடத்தில் நடைபெற்ற  இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள மிகப்பெரிய கத்தோலிக்க இளையோர்க்கான FLAME 2023 கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

எல்லாம் வல்ல கடவுள் இளையோர் ஒன்றாகக் கூடும் இந்நேரத்தை ஆசீர்வதிப்பார் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆராதனை, இசை, சான்று, கிறிஸ்துவுடனான நட்பை ஒவ்வொருவருடன் பகிர்தல், போன்றவற்றின் வழியாக, நம்பிக்கையிலும் அன்பிலும் வலுவாக வளர்ந்து, நற்செய்திக்கு துணிவுடன் சாட்சியாக இருக்க அழைப்புவிடுத்துள்ளார்

கடவுளின் தாயாம் மரியாவைப் போல, இறைவனின் அழைப்பிற்கு விரைந்து பதிலளித்து வாழவும், தாராள மனப்பான்மை, பணி, தூய்மை, விடாமுயற்சி, மன்னிப்பு, நமது தனிப்பட்ட தொழிலுக்கு நம்பகத்தன்மை, செபம், நீதியைப் பின்தொடர்வது, பொதுவான நன்மைகளான ஏழைகளுக்கு அன்பு, சமூக நட்பு போன்றவற்றின் வழியாக சாட்சியமுள்ள வாழ்வு வாழவும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார் .

கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரையும் வால்சிங்ஹாம் அன்னையின் பரிந்துரையில் அர்ப்பணிப்பதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இளையோர் அனைவரும் இறைவன் அளிக்கும் ஞானம், மகிழ்ச்சியும் மற்றும் அமைதியைப் பெற அவர்களுக்காக செபிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் சார்பாக திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திடப்பட்டு அனுப்பப்பட்ட இச்செய்தியானது, FLAME 2023 காங்கிரஸ் கூட்டத்தின் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.