Namvazhvu
ஆசிரியக் குருக்கள், கன்னியர்கள் வரி செலுத்த வேண்டும்
Thursday, 20 Jun 2019 07:35 am

Namvazhvu

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து அரசு தரும் சம்பளம் வாங்கும் அருள்பணியாளர்களும் அருள்சகோதரர்களும் அருள்சகோதரிகளும் வருமான வரி தாக்கல் செய்யவேண்டும் என்ற உயர் நீதி மன்ற உத்தரவுக்கு தமிழகத் திருஅவையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் இத்தனை ஆண்டுகாலமாக நீடித்து வந்த வரிவிலக்கு முடிவுக்கு வருகிறது. ஆசிரியப்பணியில் ஈடுபட்டுள்ள இவர்கள் பெறும் சம்பளத்தை தாங்கள் சார்ந்த துறவறச் சபைக்கும் மறைமாவட்டத்திற்கும் அளித்து வந்தனர். அவர்கள் அளிக்கும் பணத்தைக் கொண்டு இத்துறவறச் சபைகளும் மறைமாவட்டங்களும் சமூகப் பணிகளில் தாராளமாக செலவழித்து ஏழை எளிய மக்கள் பயனடைய உதவின.  இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிமுக தலைமையிலான இந்தத் தமிழக அரசு 2015 ஆம் ஆண்டு மாநில வருமான வரித்துறை முலமாக நீண்டகாலமாக இருந்து வரும் இந்த வரிவிலக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து  தமிழகத் திருஅவை சார்பில் உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்து இந்த உத்தரவுக்கு தடையாணை பிறப்பித்தது. இதற்கு வருமான வரித்துறை மேல்முறையீடு செய்து மேற்கண்ட இந்த உத்தரவைப் பெற்றுள்ளது. கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான வக்கிர மனப்பான்மை கொண்ட தமிழக அரசின் வருமான வரித்துறையின் தொடர் வாதத்தின் காரணமாக உயர்நீதிமன்றம், வருமான வரித்துறையோ தமிழக அரசோ ஒரு  நிறுவனத்தின் சமயக் கொள்கையைப் பற்றி ஒன்றும் செய்ய இயலாது. ஆசிரியர்கள் துறவியாகவோ நற்செய்திப் பணியாளராகவோ இருக்க
லாம். அதனால் வரி விலக்கு பெறு வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  2015 ஆம் ஆண்டு கேரள அரசும் இதே போன்று வரிவிலக்கை ரத்து செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்னும் வரிவிலக்கு கடைபிடிக்கப்படுகிறது.  இது குறித்து தமிழகத் திருஅவை கூடி விவாதித்து தக்க நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக ஆயர்பேரவையின் துணைச் செயலாளர் அருள்முனைவர் டு.சகாய ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.