Namvazhvu
பொய் பரப்புரை செய்கின்ற ஆளுநர்! தமிழ்நாடு ஆயர் பேரவையின் வன்மையான கண்டனம்!
Tuesday, 17 Sep 2024 10:14 am
Namvazhvu

Namvazhvu

கடந்த 07-09-2024 சனிக்கிழமை அன்று சென்னை-மயிலாப்பூரில் அமைந்திருக்கின்ற P.S. கல்விக் குழுமத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தின்போது உரையாற்றிய மாண்புமிகு ஆளுநர் R.N ரவி அவர்கள், ‘புதிய பாரதம் மிக எழுச்சியுறுவதாய் உள்ளது’ என்றும், ‘இதற்குச் சமஸ்கிருதக் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது’ என்றும் வழக்கம்போல் தன்னுடைய பொய் பிரச்சாரத்தைப் பதிவு செய்திருக்கிறார். சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஆளுநர் ரவி, இத்தகைய உண்மைக்குப் புறம்பான கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அவர்கள் சிறுபான்மைச் சமூகத்தின் மீதும், சமயச் சார்பற்ற இந்திய மக்கள் மீதும் தனக்கு இருக்கும் வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘ஆங்கிலேய அரசாங்கம் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் இணைந்து, பாரதத்தின் அடையாளத்தை அழிக்க முற்பட்டது’ என்றும், ‘பாரதத்தின் உணர்வைக் குறைப்பதற்கு இந்தியக் கல்வி முறையை அழித்துள்ளனர்’ என்றும் கூறியிருக்கிறார். அத்தோடு ‘நம்முடைய செல்வங்களையும், கலைப் பொக்கிஷங்களையும் திருடிச் சென்று விட்டனர்’ எனவும், ‘நமது நாட்டில் உள்ள மக்களுக்குத் தவறான ஓர் அடையாளத்தை உருவாக்க, வரலாற்றைத் திரித்து தவறான வரலாற்றைப் புகுத்தினர்; இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு சதிச்செயல்’ என்றும் பொய் பிரச்சாரம் பரப்பியிருக்கிறார்.

மாண்புமிகு ஆளுநரின் இக்குற்றச்சாட்டுகள் நமக்குப் புதிதல்ல. மேற்சொன்ன அனைத்திலும் பல விஷமக் கருத்துகள் பொதிந்துள்ளன. இக்கூற்றில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது. ஆங்கிலேயர்களும் கிறிஸ்தவர்களும் ஓரணியாகவும், மற்றவர்கள் எதிரணியாகவும் இருந்ததாகக் கூறுவது முற்றிலும் வரலாற்றுத் திரிபாகும்.

ஆளுநர் என்பவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் மாநில அரசுடன் இணைந்து செயல்பட கடமைப்பட்டவர். ஆனால், ஆளுநர் ரவி பொய் பரப்புரையை மேற்கொண்டு மீண்டும் மீண்டுமாகச் சிறுபான்மைச் சமூகத்தையும், அதிலும் குறிப்பாக, கிறிஸ்தவச் சமூகத்தையும் இழிவுபடுத்தி வருவது வெட்கத்திற்குரியது.

அனைத்து மதங்களையும், மரபுகளையும் கிறிஸ்தவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். கிறிஸ்தவர்கள் மக்களையும் மண்ணையும், அதன் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் பெரிதும் பற்றிக்கொண்டவர்கள். மாநிலத்தின் ஒற்றுமையோடும் அமைதியோடும் வளர்ச்சியை நோக்கி நடைபோடும் மக்களின் நடுவில், வெறுப்பு அரசியல் ஒன்றைத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறார். மக்களிடையே பிரிவினையை விதைத்து, மத மோதல்களையும், சமூக மோதல்களையும் தூண்டி விடுவதற்காகச் சிறுபான்மையினரின் உரிமைகளையும் மாண்பையும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்.

இந்தியச் சமூகத்திற்கு மிஷனரிமார்கள் ஆற்றிய கல்வித் தொண்டு, சமூகத் தொண்டு, மருத்துவத் தொண்டு ஆகியவை பற்றி இந்திய மக்கள் நன்கு அறிவர். இந்தியா இன்று உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதற்குச் சிறுபான்மைச் சமூகமும், மிஷனரிகளும் ஆற்றிய அளப்பரியக் காரியங்களை யாரும் மறுக்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள். இன்றளவும் அப்பணிகள் தொடர்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உண்மையை மூடி மறைத்து, பொய் பிரச்சாரங்களைத் தொடர்ந்து பேசி, அமைதியற்ற ஒரு நிலையை ஏற்படுத்தி வரும் ஆளுநரைக் கிறிஸ்தவர்களின் சார்பாகவும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலுள்ள சிறுபான்மைச் சமூக மக்களின் சார்பாகவும், நட்புறவோடும், ஒற்றுமையோடும் வாழும் அனைவரின் சார்பாகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். சாதி, மதப் பிளவுகளைக் கடந்து மக்கள் ஒன்றுபட மாண்புமிகு ஆளுநர் வழிகாட்ட வேண்டும். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதைச் சீர்குலைப்பதிலிருந்து விலகி, தான் வகிக்கும் பதவிக்குரிய மேன்மையான, அரசியல் சாசன பணிகளை மட்டுமே ஆற்றிட கேட்டுக்கொள்கிறோம்.

ஆளுநரின் உண்மைக்குப் புறம்பான இப்பேச்சை தமிழ்நாடு ஆயர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலும் நடக்காத வண்ணம் அவர் கண்ணியமாகப் பேசவும், அனைவரையும் சமமாக நடத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயர்

தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை