Namvazhvu
ஆசைகளும் ஆசிகளும்! ‘நம் வாழ்வு’ முன்னாள் ஆசிரியர் தந்தை மரியருள் தம்புராசு அவர்களின் மனந்திறந்த உரையாடல்! (01-01-1978) -05
Friday, 25 Oct 2024 05:17 am
Namvazhvu

Namvazhvu

 ‘ஆசைக்கோர் அளவில்லை!’, ‘ஆசையை வென்றவர் முனிவர்!’ என்றெல்லாம் பழமொழிகள் உள்ளன. எனக்கு ஓர் ஆசை கிளம்பியது. ‘எனக்குஎன்றா கூறினேன்? திருத்திக் கொள்ளுங்கள், ‘எங்களுக்குஎன்று சொல்ல வேண்டும். ஏனெனில், ‘நம் வாழ்வு ஆசிரியர் குழுவிற்கு அந்த ஆசை ஏற்பட்டது. கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அந்த ஆசை எழுந்தது.

என்ன ஆசையோ!

நம் வாழ்வுஇதழைப் பற்றி வாசகர் பெருமக்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களுடைய விருப்பு வெறுப்புகளைக் கண்டறிய வேண்டுமே!

இதுதான் எங்கள் ஆசை. யாரைக் கேட்பது?

அறிந்தவர், தெரிந்தவரைக் கேட்டால், பெரும்பாலும் சாதகமான பதில்தான் வரும். முன்பின் தெரியாதவர்களையும், நேரில் கண்டறியாதவர்களையும் கேட்டால்....?

ஆம், அதுதான் சரி!’ என்றனர் ஆசிரியர் குழுவினர்.

ஆயிரம் பேரைக் கேட்போம்என்று தீர்மானம் ஆயிற்று.

500 வாசகர்களுக்கு அஞ்சல் தலை கொண்ட உள்நாட்டுக் கடிதங்களும்,  500 பேருக்கு அஞ்சல் தலையில்லாத வெறும் உள்நாட்டுக் கடிதங்களும் அனுப்பினோம். அதில் பத்து கேள்விகள் கேட்டிருந்தோம். 550 வாசகர்களிடமிருந்து அதாவது 55% பதில் தந்து உதவினர்.

அவர்கள் தெரிவித்த ஆசைகள், அவர்கள் அறிவித்த ஆசிர்களை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் அல்லவா?

நம் வாழ்வுஉங்களுக்குப் பிடித்திருக்கிறதா? ஏன்?

சங்கடமான கேள்வி! ‘ஆம்என்றாலும் காரணம் தர வேண்டும். ‘இல்லைஎன்றாலும் காரணம் தர வேண்டும். ஆனால், வாசகர்கள் சங்கடப்படவில்லை! காரணமே கூறாமல்பிடிக்கவில்லைஎன்ற ஏழு பேரைத் தவிர எஞ்சிய 543 பேர்  ‘பிடித்திருக்கிறதுஎன்றனர். காரணம், போட்டி! ‘திருச்சபை என்ற பாரிக் குடும்பத்தின் செய்திகளை வாரந்தோறும் தருவதால் இந்த வார இதழை விரும்புகிறோம்என்றனர் 25%. ‘இது கத்தோலிக்கப் பொது வார இதழ் அல்லவா? இதை விட வேறு காரணம் தேவையா?’ என்று கேட்டனர் 18%. ‘இதுவரை நாங்கள் கேட்டறியாத எத்தனையோ வகைச் செய்திகளைத் தருவதால் இதழை விரும்புகிறோம்என்றனர் 17%. மறை விளக்கங்களைப் பாராட்டி 15%. ஆன்மிக வளர்ச்சிக்கும் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும் துணை செய்வதைக் குறிப்பிட்டு 13%. சிறுகதைகள் போன்ற சுவைக்காக 61/2%. தொடர்கதை, துணுக்குகளைப் பாராட்டி 3% காரணமாகக் காட்டினர். ‘கத்தோலிக்க வார இதழ்என்ற உரிமைப் பற்றும், திருச்சபைச் செய்திகளை அறியத் துடிப்பும், ஆன்மிகத்தை வளர்த்துக்கொள்ள ஆவலும் என்பதெல்லாம் சாதாரணஆசிர்கள் அல்லவே!

உங்கள் பிரதியை எத்தனை பேர் வாசிக்கிறார்கள்?

வந்த பதில்கள் எங்களை வியப்பில் ஆழ்த்தின. சராசரியாக ஒவ்வொரு பிரதியையும் 11 பேர் படிக்கின்றனர். அதாவது, ஒவ்வொரு வாரமும் சுமார் இரண்டு இலட்சம் வாசகர்களைச் சந்திக்கிறோம். மிகவும் உற்சாகமூட்டும் செய்தியல்லவா இது! அப்படி வாசிப்பவர்களில் ஆடவர் 38%,   பெண்டிர் 31%, மாணவர் 31%.

உங்கள் கல்வித் தரம் என்ன?

எழுதப் படிக்கத் தெரிந்தவர் முதல் S.S.L.C. தேறியவர். B.A., B.Sc., M.Sc., B.E.,  M.B.B.S., மெய்யியல், இறையியல் படித்தவர் இறுதியாக! அறிவு வளர்ச்சியும், ஆன்மிகமும் தொடக்க நிலை முதல் இறுதி நிலைவரை உள்ள வாசகர்கள்இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்களுக்குத் தர்ம சங்கடமான நிலைமைவாசகர்களின் சராசரி அறிவுப் பக்குவம் இதுதான் என்று துல்லியமாகக் கணக்கிட இயலவில்லை.

உங்கள் அலுவல் என்ன?

சாதாரண விவசாயம் முதல் வணிகம், ஆசிரியப் பணி, அலுவலர், கல்லூரி மாணவர், மாணவியர், பேராசிரியர்கள்...

உங்கள் சராசரி மாத வருமானம் என்ன?

ரூ. 90 முதல் ரூ. 1500 வரை. ஒரு சிலர் அதற்கும் மேலாக வருமானம் உடையவர்கள்.

உங்களுக்குப் பிடித்தமான பகுதிகளை வரிசைப்படுத்திக் கூறுவீர்களா?

பெரும்பான்மையோரின் விருப்பப்படி, 1) திருத்தந்தை பேசுகிறார், 2) தொடர்கதை, சிறுகதை, 3) ஞாயிறு சிந்தனை, 4) ஆசிரியவுரை, 5) ஏனைய பகுதிகள் என்று வரிசைப்படுத்தியுள்ளனர்.

புதிதாக என்ன அம்சங்களைப் புகுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

புனிதர்களின் வாழ்க்கை வரலாறு, கேள்வி-பதில், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், சிறிய-பெரிய நாடகங்கள் வேண்டும் என்றனர். எல்லா இதழ்களிலும் இல்லாவிடினும், சில சமயங்களில் வெளியிட வேண்டியவை என்ற நீண்ட பட்டியலே தந்துவிட்டனர். அவற்றையும் நீங்கள் அறிய வேண்டும் அல்லவாசுகாதாரக் குறிப்புகள், விகடத் துணுக்குகள், சின்னஞ்சிறு செய்திகள், நாட்டு நடப்பு, திரைப்பட விமர்சனம், சமையல் குறிப்புகள், பெண்கள் பகுதி, தொழில் வாய்ப்புச் செய்திகள், கேலிச்சித்திரங்கள், இலக்கியம், விளையாட்டுப் போட்டிகள், சுத்தோலிக்க ஒலிபரப்புச் செய்திகள், திருச்சபை வரலாறு, பல்வேறு துறவியர் இல்லங்கள் பற்றிய தகவல்கள், மறைக்கல்வி கட்டுரைகள், தலத் திருச்சபைகளின் வரலாறு, பேட்டிகள், பெரியோர் வாழ்வில் நிகழ்ந்தன, கருத்துப் பரிமாற்றங்கள்...

தாங்கள் வேறு பத்திரிகைகளைப் படிப்பதுண்டா?

பலர் பல்வேறு பத்திரிகைகளைப் படிக்கின்றனர். அவற்றைக் குறிப்பிட்டிருந்தனர். ‘நம் வாழ்வுதவிர வேறு இதழையே தொடாதவர்களும் உண்டு!

நம் வாழ்வுஎந்த நாள் கிடைக்கிறது?

வெள்ளி, சனி, திங்கள், சிலர் செவ்வாயன்று கிடைக்கிறது என்கின்றனர். பெரும்பாலோர் வெள்ளியன்று தவறாமல் கிடைப்பதாகக் கூறினர். ஒவ்வொரு புதன்கிழமையன்றும் காலையில் பிரதிகளை அஞ்சலகத்தில் சேர்ப்பிக்கிறோம் என்பது வாசகருக்குத் தெரிய வேண்டும். சலுகைக் கட்டணத்தில் வரும் அஞ்சல் என்பதனால், அஞ்சலகத்தார் தங்கள் வசதிப்படி வழங்குகின்றனர். இதுவரை எப்பாடுபட்டும் நம் அச்சகம் புதனன்று அஞ்சலில் சேர்க்கத் தவறியதில்லை!

வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பலர் ஆசிரியக் குழுவினரைப் பாராட்டியுள்ளனர். சிலர் தங்களுக்காகச் செபிக்கும்படி கோரியிருந்தனர். இந்தஉரையாடலின்அடிப்படையில்தான்நம் வாழ்வுஇதழை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இது நம் இறைமக்களின் வார இதழ் என்பதனால், அவர்களுடைய சுமூகமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறோம்.

நம் வாழ்வுவெறும் பிரசங்க மேடையல்ல! ஒருவர் பேச, ஆயிரம் பேர் அமர்ந்து கேட்க வேண்டும் என்ற நியதி இல்லை. அனைவரும் அன்புக்குப் பங்கமின்றி, ஒருவரையொருவர் மதித்து, ஒருவர் கருத்தை மற்றவர் அனுதாபத்துடன் புரிந்து கொள்ளவும், ஒருவர் ஒருவரைத் திருத்திக் கொள்ளவும் வாய்ப்புத் தருவதால், அனைவருமே அறிவுத் தெளிவு பெறலாம், வளர்ச்சியுறலாம் என்று நம்புகிறோம். உங்கள் ஆசைகளை அறிந்துள்ளோம். திருச்சபைச் செய்திகளையும், பல்வேறு மக்களின் கருத்துகளையும் அறிவிப்பதுதான் இன்று ஒரு கத்தோலிக்க இதழ் ஆற்றக்கூடிய சிறந்த பணி என்று எண்ணுகிறோம்.