Namvazhvu
திருத்தந்தையின் ஈராக் பயணம் காயங்களை ஆற்றும் - கர்தினால் சாக்கோ
Wednesday, 17 Jul 2019 08:36 am

Namvazhvu

“இறைவேண்டுதல் இன்றி, ஒருவராலும் இயேசுவின் சீடராக வாழமுடியாது” என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறிய எண்ணத்தை நினைவுறுத்தி, அருள்பணியாளர்கள், தனிப்பட்ட, மற்றும் குழும இறைவேண்டல்களை மேற்கொள்ள வேண்டும் என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ கூறினார்.
ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் மேற் கொண்டுள்ள ஆண்டு தியானத்தில் உரை வழங்கிய கர்தினால் சாக்கோ, ஆயர், மற்றும் அருள்பணியாளர் என்ற நிலைகள், பணிகளே அன்றி, பதவிகள் அல்ல என்பதை தெளிவுபடுத்தினார்.
ஜூலை 8 திங்கள் முதல், 12 வெள்ளி முடிய, அங்காவா நகரில் நடைபெற்றுவரும் ஆண்டுத் தியானத்தில், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் சாக்கோ, திருஅவையை வழிநடத்தும் பொறுப்பு, ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள விரு தாகவோ, மதிப்பாகவோ கருதப்படாமல், ஓர் அழைப்பாகக் கருதப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அண்மைய ஆண்டுகளில், ஈராக் நாடு அடைந்துள்ள காயங்களின் விளைவாக, கிறிஸ்த வர்கள் மட்டுமின்றி, அருள்பணியாளரும், தங்கள் சொந்த நலனை மட்டும் கருத்தில் கொண்டு, ஈராக் நாட்டை விட்டு வெளியேறியிருப்பது, வேதனை தரும் வரலாற்று நினைவு என்று, கர்தினால் சாக்கோ எடுத்துரைத்தார்.
வருகிற 2020 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் ஈராக் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது, இந்நாட்டின் கிறிஸ்தவச் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் அனைத்துக் காயங்களையும் குணமாக்கும் என்று தான் நம்புவதாக, கர்தினால் சாக்கோ தன் தியான உரையில் குறிப்பிட்டார்.