Namvazhvu
Salesians of Don Bosco, Chennai வரலாறும் சாதனைகளும்
Friday, 03 Apr 2020 05:29 am
Namvazhvu

Namvazhvu

தொன்போஸ்கோ ஆரட்டரி என்று அழைக்கப்பட்ட, தொன்போஸ்கோ இளைஞர் மன்றம் 75 வருட காலம்தெற்கு ஆசியாவின் முதல் இளைஞர் மன்றமாகஇயங்கி வருகின்றது.

1944 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 12  ஆம் நாள் சிறிய எண்ணிக்கையிலான சிறுவர்களைக் கொண்டு ஒரு சிறு கொட்டகையில் திருப்பலியுடன் ஆரம்பிக்கப்பட்டு, அதே வருடம் நவம்பர் திங்கள் 24 ஆம் தேதி "கிறிஸ்து அரசர்" விழாவின்போது சுமார் 300 சிறுவர்களைக் கொண்டு ஆயரின் பிரதிநிதி மற்றும் சலேசிய மாகாண தலைவரின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இதனை ஆரம்பித்த ஹாலந்து நாட்டினை சேர்ந்த அருட்தந்தை. பிரான்சிஸ் ஸ்லூஸ் அடிகளார் சிறுவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் உழைப் பால் அவர்களை ஊக்குவித்து வளர்த்தார். 1956 செப்டம்பர் 26 அன்று சென்னை - மயிலை பேராயர் மேதகு டாக்டர் லூயிஸ் மத்தியாஸ் அவர்களால் புனித தோமினிக் சாவியோ சிறு ஆலயம் திறந்து வைக்கப்பட்டது.

1958 செப்டம்பர் 3 அன்று அயர்லாந்தை சேர்ந்த தந்தை சீன் மெக்பரன் அடிகளார் அவர்களால் ஆலயத்தின் இடது புறத்தில் இளைஞர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.

அவரது காலம் பொற்காலம் ஆகும். புனித தோமினி சாவியோ ஆலயத்தின் வடபுறத்தில் அமைந்துள்ள மூன்று தளங்களை கொண்ட இளைஞர் மன்றம் அமைவதற்கு இவர் முன்னோடியாக இருந்தார். 1965 ஜூன் 25 ஆம் நாள் சென்னை - மயிலை பேராயர். டாடக்டர். லூயிஸ் மத்தியாஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1966 டிசம்பர் 8 அன்று அதாவது இத்தாலி நாட்டின் வல்தோகாவில் போஸ்கோ ஆரம்பித்த ஆரட்டரியின் 125 ஆம் ஆண்டின் அதே நாளில், சென்னை-மயிலை பேராயர் டாக்டர் அருளப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மன்றக் கட்டிட சுவற்றில் உள்ள கல்வெட்டில் "இறைவனின் புகழுக்காக, இளைஞருக்குச் சேவை புரிய" எனப் பதியப்பட்டுள்ளது. சலேசியரின் இளைஞர் பற்றினை இது பறைசாட்டுகின்றது.

வெள்ளி விழா (1944-1969 - 25 வருடங்கள்)

1969 அக்டோபர் முதல் 1970 டிசம்பர் வரை 99 நாள்கள் அருட்தந்தை ரோசோரியோ கிருஷ்ணராஜ் தலைமையில் வெள்ளிவிழா வரை திருப்பணியாற்றிய சலேசியக் குருக்களுடன் திருப்பலி கொண்டாடப்பட்டது. பின்னர் மாபெரும் பேரணி மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னாளில் தர்மபுரி மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி அவர்கள் மன்ற இயக்குநராக இருந்து வெள்ளி விழாவினை நடத்தினார்.

பொன் விழா (1944-1994-50 வருடங்கள்)

1994 இல் இயக்குநர் அருட்தந்தை பிரான்சிஸ் சுந்தராஜ் அவர்களின் தலைமையில் பொன்விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வைரவிழா (1944 - 2004 - 60 வருடங்கள்)

தொன் போஸ் கோவின் வல்தோக்கா ஆரட்டரியின் உறுப்பினராக புனித தோமினிக் சாவியோ 50 வருட அர்ச்சிப்பு ஆண்டும் மற்ற இளம் புனிதர்களான புனிதர் அல்பர்டே மார்வேலி (இத்தாலி, ரிமினி இளைஞர் மன்றம்) புனிதர் B..L. லௌரா விகானாவின் நூற்றாண்டும் மன்றத்தின் வைரவிழா ஆண்டுடன் இறைவனின் அருளால் இணைந்து வந்தது தற்போது சென்னை மாகாண சலேசிய தலைவரும் அப்போதைய மன்றத்தின் இயக்குநருமான அருட்தந்தை K.M. ஜோஸ் அவர்களின் தலைமையில் ஜூலை 2004 முதல் ஏப்ரல் திங்கள் வரை நடைபெற்ற நிகழ்வுகளில்நிறைவு விழாவில் மன்றத்தின் வைரவிழா ஆண்டு வரை திருப்பணியாற்றிய இயக்குநர்கள் மற்றும் இல்லத்தந்தையர் நினைவு கூர்ந்து கௌரவிக்கப்பட்டனர்.

பவளவிழா (1944-2019 - 75 வருடங்கள்)

தென்போஸ்கோ இளைஞர் மன்றத்தின் பவளவிழா வரலாற்றில் மறக்கமுடியாத மைல்கல்  ஆகும். 1944 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இம்மன்றம் 75 ஆண்டுகளில் சமுக, சமுதாய விஞ்ஞான மாற்றங்களுக்கு ஏற்றவாறு போஸ்கோவின் கொள்கை களில் மாற்றம் இல்லாமல் இளைஞருக்காக என்ற அதே சிந்தனையுடன் பணியாற்றி வருகிறது.

தொன்போஸ்கோவின் வழிமுறைகளை இன்றும்பின்பற்றி இம்மன்றம் இயங்கி வருவதால் சென்னை மாகாணத்தின் "வல்தோக்கா" என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறது.

தற்போதைய பவள விழா, மன்ற இயக்குநர் அருட்தந்தை இராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் துவங்கி, தொடர்ந்து நூற்றாண்டு விழாவினை நோக்கி பயணிக்கின்றது.

பவள விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக ஆன்மிகம், விளையாட்டுக்கலை, சாரணர் மற்றும் சமூக சேவை என பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. குறிப்பாக முன்னாள் அங்கத் தினரை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து, சிறப்பித்து, கல்வி பணியில் 10 மற்றும் 11,12 ஆம் வகுப்பு பணிகளையும் செய்து வருகின்றது.

பவளவிழா ஆண்டில் மன்றத்தின் முன்னாள் அங்கத்தினரும், திரைப்பட நடிகரும் பிரசாந்தின் தந்தையுமான மலையூர் மம்பட்டியன் புகழ் திரு. தியாகராஜன் அவர்கள் மன்ற உறுப்பினர் தினத்தன்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுஇசைக்கருவிகள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களை பெருந்தன்மையுடன் அளித்தார். அவை நன்றியுடன் நினைவு கொள்ளப்படுகின்றன. அவர் அளித்த இசைக் கருவிகளை பயில தற்போது மன்றத்தில் தனியே இசைக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. பவள விழாவின் நன்றித் திருப்பலி மன்றத்தின் முன்னாள் அங்கத்தினர் மற்றும் பணிநிறைவு சென்னை-மயிலை மறைமாவட்ட பேராயர் மேதகு டாக்டர் A.M .சின்னப்பா அவர்களால் நிறைவேற்றப்பட்டது.

தொன்போஸ்கோ இளைஞர் மன்றத்தின் சலேசியர் அருட்தந்தையர் (SDB)

மன்றத்தின் அங்கத்தினராக இருந்து சலேசிய சபையில் நிலை நிறுத்தப்பட அனுப்பியோரின் பட்டியல் பெரியதாக இருந்தாலும் கீழ்கண்டவர்கள் சலேசிய சபையின் அருட்பணியாளர்களாக அருட்பொழிவு செய்யப்பட்டவர்கள்.

ஜெகராஜ் இராயன், பிரான்சிஸ் பெரஸ், ரொசோரியோ கிருஷ்ணராஜ், அமல்ராஜ் தாமஸ், சாலமோன், ஜான் ஜெயகுமார், சிரிகோரி தேவராஜன், பெர்க்மென்ஸ், மைகேல் தாமஸ், ஜோசப் எக்ஸ்படிட், ஜெரோம் வல்லபராஜ், மோகன் இராஜ், பிரான்சிஸ் போஸ்கோ, சாம்சன், அருள்லூகாஸ், சிரில் சந்திரன் மற்றும் சகோதரர்கள் இளஞ்செழியன், மரியதாஸ்.

இம்மன்றத்தின் வளர்ச்சிக்காக 1944 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சலேசியர்கள் உழைத்து இம்மன்றத்தை தரம் உயர்த்தியுள்ளனர்.

இளைஞர் மன்றத்தில் உருவானோர்

தொன்போஸ்கோ இளைஞர் மன்றத்தின் தனித்துவமே மன்றத்தால் பல்வேறு துறைகளில் உருவாக்கப்பட்டவர்கள்தான். ஆன்மிகத்தில், விளை யாட்டுத்  துறைகளில் குறிப்பாக கால்பந்து, நாடகம், பாடகர், பத்திரிகையாளர், வழக்கறிஞர், அரசு அலுவலர், மருத்துவர், பொறியாளர் என பல்வேறு துறைகளில் மன்ற உறுப்பினர்கள் சிறந்து விளங்க தங்களின் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் அருட்தந்தையர்கள் மெக்பரன், சிகாமணி, க்ஷ. ஜெரார்ட், சகோதரர். மெரின் மற்றும் பலர்.

மன்றத்தின் மிக முக்கிய தலைவர்கள்

திரு. . ஜான்போஸ்கோ மன்றத்தின் முதல் சலேசியர் அல்லாத உதவி இயக்குநர். இவர் 1998 முதல் மன்றத்தின் வளர்ச்சிக்காக தனது பணியினை செய்து வருகின்றார். இவர் இரண்டு முறை சலேசிய மாகாணத் தலைவரின் அதிகாரத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் ஸ்பெயினில் 2018 ஆம் ஆண்டு உலகளவில் நடைபெற்ற சலேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். மேலும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக மன்றத்தில் தனது சேவைகளை ஆற்றியுள்ளார்.

திரு. ஆனந்த் மன்றத்தின் மற்றொரு சலேசியர் அல்லாத மன்ற தலைவர். இவரும் சலேசிய மாகாணத்தலைவரின் அதிகாரம் அடங்கிய குழுவில் பங்கேற்றவர். 2019 இல் மும்பையில் நடந்த தொன்போஸ்கோ இளைஞர் மன்றங்களின் மாநாட்டில் கலந்துகொண்டவர்.

பவள விழா நிறைவுக் கொண்டாட்டம் (08.02.2020)

பவள விழாவின் மாபெரும் "முப்பெரும் விழா" ஆக நடைபெற்றது.தொன்போஸ்கோ விழா, பவளவிழாவின் மாபெரும் இறுதி விழா

இளைஞர் ஆண்டு தொடக்க விழா, அன்று மாலை 5.30 மணியளவில் தொன் போஸ்கோ இளைஞர் மன்றத்தில் நடைபெற்றது. சென்னை - மயிலை உயர்மறை மாவட்டப் பேராயர். டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் திருப்பலியுடன் இளைஞர்களின் பல்சுவை நிகழ்ச்சி இதில் இடம்பெற்றன. இதில் சென்னை சலேசிய மாகாண தலைவர் அருட்தந்தை K.M. ஜோஸ் மற்றும் சலேசிய மாகாணத் துணைத் தலைவர் அருட்தந்தை. ஜான் போஸ்கோ ஆகியோர் பங்கேற்றனர். சென்னை பல்வேறு பங்குகளின் இளைஞர்கள் அன்பு இல்லம், மரியாலயா, முன்னாள் அங்கத்தினர், மாணவர் அமைப்பினர், நமது மன்ற உறுப்பினர் மற்றும் இளைஞர் மன்றத்தினர் என ஏராளமானோர் இவ்விழாவில் எழுச்சியுடன் பங்கேற்றனர்.

"உலகின் இளையோரை நல் குடிமக்களாக்க ஆயத்தமாவோம்"

இறைவனின் ஆசியோடு 2044 ஆம் ஆண்டு தொன்போஸ்கோ இளைஞர் மன்றத்தின் நூற்றாண்டு எனும் மைல் கல்லை அடைய வீறு நடைபோடுவோம்.

"நல்லுடலில் நல்லான்மா"