Namvazhvu
ஜோ. விண்ணரசன் , மேல்வழி. கள்ளக்குறிச்சி யார் உயர்ந்தவர்???
Thursday, 23 Apr 2020 08:02 am
Namvazhvu

Namvazhvu

 

காட்டு வழியே கடந்து சென்றான்

             நாட்டுப் புறத்து மனிதன்

வீட்டு நகைகள் விற்றுத் தனது

              பாட்டை மெல்ல நகர்த்த

 

நோட்ட மிட்ட கள்வர் கூட்டம்

              போட்டுத் தாக்கி பறித்து

ஓட்ட  மிட்டு ஒளிந்து போயினர்

              மாட்டிக் கொள்ள மறுத்து

 

குற்று உயிராய் கிடந்தா னவன்

              இதயம் மெல்லத் துடிக்க

மற்ற யவர் உதவினா லவன்

              உதய மென்றே  தவிக்க

 

வேதம் குடித்த ஞானி ஒருத்தர்

              போகும் வழியில் பார்த்தார்

ஓதும் தனது கடமை எண்ணி

              மேவும் பயணம் காத்தார்

 

உயர்ந்த சாதியாய் மெச்சிக் கொள்ளும்

              செல்வ சீமானும் தொடர்ந்தார்

தாழ்ந்த சாதியாய் இருப்பா  னென்றெண்ணி

              செல்லும் இடமே நகர்ந்தார்

 

தொட்டால் தீட்டு என்று ஒதுக்கிய

              பட்டி காட்டான் வந்தான்

விட்டால் மடிந்து போவா ரென்றெண்ணி

             கட்டி அணைந்து கொண்டான்

 

பயணம் வந்த குதிரையில் ஏற்றி

            மருத்துவ மனைக்குச் சென்றான்

பணத்தை செலுத்தி சிகிச்சை நிகழ்த்தி

            மனிதம் காத்து வென்றான்

 

யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்?

            எவர் என்பது தெரியும்

வான் உயர்தவர் வார்த்தை யானவர்

             வழி நடந்தால் புரியும்