No icon

சிக்குயின்குயிரா கன்னி மரியாவின் நூற்றாண்டு விழா

கொலம்பியா நாட்டின் பாதுகாவலியான சிக்குயின்குயிரா  கன்னி மரியாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் ஜூலை மாதம்  ஒன்பதாம்தேதி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்தம் பிரதிநிதியாக  பிரேசில் நாட்டின்  கர்தினால் ரெய்முந்தோ தமஸீனோ அஸ்ஸிஸ் கலந்து கொண்டு, திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தியை வாசித்தளித்தார். இலத்தின் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த மடலில் “ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!” (தி.பா. 45:10) என்று, அன்னை மரியாவை விவரிக்கும் திருப்பாடல் வரியை, தன் மடலின் துவக்கத்தில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். 
சிக்குயின்குயிரா  கன்னி முடிசூட்டப்பட்ட முதல் நூற்றாண்டு சிக்குயின்குயிரா  செபமாலை அன்னை, அல்லது சிக்குயின்குயிரா  கன்னி என்றழைக்கப்படும் அன்னை மரியாவை, கொலம்பியா நாட்டின் பாதுகாவலராக முடிசூட்டுவதற்கு, திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் 1910ம் ஆண்டு, சனவரி 9 ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்தாலும், அந்நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழலால், மரியன்னையின் உருவம், 1919 ஆம் ஆண்டு 
ஜூலை 9 ஆம் தேதி முடிசூட்டப்பட்டது. குழந்தை இயேசுவையும், செபமாலையையும் தாங்கி நிற்கும் அன்னை மரியாவின் இருபுறமும், பதுவை நகர் புனித அந்தோனியும், திருத்தூதரான புனித அந்திரேயாவும் நிற்பதுபோல், இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு, ஜூலை 3 ஆம் தேதி, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், சிக்குயின்குயிரா பசிலிக்காவிற்குச் சென்று, கொலம்பியா நாட்டின் அமைதிக்காக சிறப்பாக வேண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment