No icon

வத்திக்கான் நகரிலுள்ள அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள்

வத்திக்கான் நகரிலுள்ள அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள்
கோவிட்-19 கொள்ளைநோயைத் தடுக்கும் ஊசிகள் விரைவில் வத்திக்கானை வந்தடையும் எனவும், சனவரி இரண்டாம் வாரத்திலிருந்து வத்திக்கான் நகர் வாழ் மக்களுக்கும், அதன் பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது துவக்கப்படும் எனவும், வத்திக்கான் நகர நலத்துறை அறிவித்துள்ளது.

தடுப்பூசிகளை பாதுகாப்பதற்கென மிகக்குறைந்த வெப்ப நிலையுடைய குளிர்சாதனப் பெட்டி ஒன்று வாங்கப்பட்டுள்ளதாகவும், வத்திக்கான் நகரிலுள்ள அனைவருக்கும் வழங்கும் அளவிற்கு தடுப்பூசிகள் பாதுகாக்கப்படும் எனவும் நலத்துறை தெரிவிக்கிறது.

மக்களுடன் அடிக்கடி நேரடியாக தொடர்புகொள்ள வாய்ப்பிருக்கும் பணியாளர்களான, நலப்பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்போர் ஆகியோருக்கும், முதியோர்களுக்கும், முதலில் தடுப்பூசி வழங்கப்படும் எனக்கூறும் வத்திக்கான் நலத்துறை, கோவிட் கொள்ளைநோய் கட்டுப்பாடுகளை மனதில் கொண்டதாக, இத்தடுப்பூசிகள் வத்திக்கான் வாழ் மக்களுக்கும், பணியாளர்களுக்கும், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கிலிருந்து, மருத்துவர்களால் வழங்கப்படும் என அறிவிக்கிறது.

Comment