No icon

பிரான்ஸின் பழம்பெரும் ஆலயத்தின் தீ விபத்து!

‘பிரான்ஸ் நாட்டின் அடையாளம்!’ 850 ஆண்டு
கள் பழமையான தேவாலயத் தில் பயங்கர  தீவிபத்து!
பிரான்ஸ் நாட்டின் முக்கிய இடங்களில் ஒன்றாகக்
கருதப்படுவதும், அந்நாட்டின் அடையாளமாக விளங்குவது மான 850 வருட பாரம்பரியம் மிக்க பாரீஸ் நகரின் புகழ்பெற்ற நோட்ரே டேம் தேவாலயம் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற தீவிபத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.  யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இந்தத் தேவாலயத்தில் திங்கள்  மாலை, திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தேவாலயத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றனர் அதிகாரிகள். மேலும், இது ஒரு விபத்து என்றும், விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்.
பழைமையான ஆலயச் சுவர்களில் ஆரம்பித்த தீ, மளமளவென ஆலயத்தின் கூரைப் பகுதிக்குப் பரவியது. இந்த ஆலயத்தின் கூரை முழுவதும் மரங்களால் செய்யப்பட்டுள்ளதால் தீ வேகமாகப் பரவியதுடன் கூரை முற்றிலுமாகச் சேதமடைந்தது.
 தேவாலய மணி இருக்கும் கோபுரத்துக்கும் தீ பரவியது. ஆனால், சுமார் 500 தீயணைப்பு வீரர்களின் 4 மணி நேர முயற்சிக்குப் பின்னர், கோபுரம் சாய்ந்து விழாமல் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தீ விபத்து காரணமாக கடும் புகை எழுந்தது. பொதுமக்கள் பலர் தங்களின் மனதுக்கு நெருக்கமான தேவாலயத்தின் இந்நிலையைக் கண்டு, கண் கலங்கி நின்றனர்.
தேவாலயத்தில் நூற்றாண்டுகள் கடந்த கலை வடிவங்கள் இருக்கின்றன. அதை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் உள்ளனர். எனினும் புனரமைப்பு பணிகளுக்காகக் கடந்த வாரம் முக்கியமான 16 செப்பு சிலைகள் அகற்றப்பட்டன. அதனால் அவை அனைத்தும் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளன. மேலும், ஆலயத்தின் கூரை தவிர்த்து மற்றப் பகுதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து அதிர்ச்சி அளிப்பதாக பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். அவர், “இந்தத் தேவாலயம் நாட்டின் உணர்வு. பிரான்ஸ் நாட்டின் அனைத்து குடிமக்களைப் போலவே நானும் நம்மில் ஒரு பகுதி எரிவதைச் சோகத்துடன் பார்க்கிறேன்” என்றார். மேலும், சேதமடைந்த இந்த ஆலயத்தை மீண்டும் அதே நிலைக்குக் கொண்டு வர முயற்சிகள் செய்யப்படும். அதற்கு நிதி திரட்டுவதற்கானப் பணிகளும் தொடங்கும் என்றார். இது பழைமையான  ஆலயம் என்பதால் இதன் சேதங்களைச் சரி செய்ய அதிக நிதி தேவைப்படும். திருத்தந்தை ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

Comment