No icon

தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் - 34

பொதுநிலையினரின் சாட்சிய வாழ்வு!

உயர் குடியைச் சார்ந்த சாந்தாயி என்ற இளம் பெண் கிறிஸ்தவத்தைத் தழுவி, ஒடுக்கப்பட்ட மக்களோடு உறவாடினாள். இச்செயலைக் கண்ட அவளின் பெற்றோர் மிகவும் கொடுமைப்படுத்தினர்இதனையறிந்த அருள்பணியாளர் கிறிஸ்தவப் பொது வழிபாட்டிலிருந்து அப்பெண்ணுக்கு விலக்களித்து, தனிப்பட்ட முறையில் ஒரு சுரூபத்தை வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட அப்பெண்கிறிஸ்துமஸ் மற்றும் பாஸ்கா பெருவிழா நாள்களில் ஆலயத்தில் பங்கெடுப்பேன்; அப்போது வீட்டு வாசலில் என் பெற்றோர் வாள்களை வைத்தாலும் தாண்டி வருவேன்; கடல் சூழ்ந்து வந்தாலும் நீந்தி வருவேன்என அக்குருவானவரிடம் தனது ஆழமான இறை நம்பிக்கையை வெளிப்படுத்தினாள். சாந்தாயி கிறிஸ்துவின் பெயரால் செபித்துக் கொடுத்த நீரைப் பருகியவர்கள் பலர் நலம்பெற அவளது இல்லம் ஒரு மருத்துவமனைபோல் செயல்பட்டது.

கயத்தாறு பகுதியில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டதைத் தந்தை அந்தோனி தெ புரவென்சா 1656, செப்டம்பர் 20 அன்று எழுதிய மடலிலிருந்து அறிய முடிகிறது. கயத்தாறு ஆலயத்தில் ஞானக் காரியங்களுக்கு மக்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார் உபதேசியார் கான்ஸ்டன்டைன். அப்போது மணியக்காரர் சில கலவரக்காரர்களுடன் அத்துமீறி ஆலயத்தில் நுழைந்து உபதேசியாரை வெறிகொண்டு தாக்கினர். இதனால் அவர் வாயிலிருந்து இரத்தம் சொட்ட மயங்கி விழுந்தார். பின்னர் அவரைத் தரதரவென்று இழுத்துச் சென்று சிறையில் அடைத்து, ஆலயத்தைச் சூறையாடினர். இக்கொடுமைகளைத் தட்டிக் கேட்ட கிறிஸ்தவர்களை அடித்து விரட்டினர். ஆனால், அவர்கள் திரண்டு சென்று மணியக்காரரிடம் இருந்து உபதேசியார் கான்ஸ்டன்டைன் அவர்களை மீட்டுச் சென்றனர். இந்து சிலைகளுக்குப் பூசை செய்து வந்த மற்றொரு கிராமத்தில் ஒரு முதியவர், அவரது மகன் மற்றும் அவரது மருமகன் கிறிஸ்தவத்தைத் தழுவினர். இதனால் அக்கிராமம் அவர்களுக்கெதிராக வெகுண்டெழுந்தது. கிறிஸ்தவத்தை மறுத்து பழைய சிலை வழிபாடுகளுக்குத் திரும்புமாறு அச்சுறுத்தினர். முதியவர் மட்டும் வேதனை தாங்க இயலாமல் அந்நேரத்தில் அவர்களுக்குக் கட்டுப்பட்டார். அவரது மகனோ, ‘நாமும் ஒரு வேளை கிறிஸ்தவத்தை மறுக்கக்கூடும்என அஞ்சி ஊரை விட்டு வெளியேறினார். 19 வயது நிரம்பிய அவரது மருமகன் ஊரை விட்டு நீங்காமல், ‘எத்தனை துயரம் வந்தாலும் கிறிஸ்துவை மறுப்பதில்லைஎன உறுதியோடு இருந்தார். இயேசுவை நிந்திக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினால், தன் நாக்கை வெட்டி எறியத் துணியும் அளவிற்கு அவ்விளைஞன் கிறிஸ்துவின்மீது பற்றுறுதி கொண்டிருந்தான். அவனைச் சாட்டையால் அடித்தனர். அவனோ சிரித்துக்கொண்டே அவ்வடிகளைத் தாங்கிக் கொண்டான். இதனால் சினங்கொண்டு அவனை இரும்புக் கம்பிகள், சங்கிலிகள் கொண்டு கொடூரமாக அடித்துத் துன்புறுத்தினர். மேலும், மரண வலிகளைத் தருகின்ற கொடிய தண்டனைகளை அவ்விளைஞனுக்குத்  தந்தபோதும், அனைத்து வேதனைகளையும் தாங்கி தனது விசுவாசத்தில் உறுதியோடு இருந்தான். எனவே, இவ்வரிய நிகழ்வைக் கண்ட அக்கொடுமைக்காரர்கள் அச்சமுற்று அவனை விடுதலை செய்தனர்; இதனைப் பற்றிக் கேள்விப்பட்ட பலர் கிறிஸ்தவத்தை ஏற்று மறைச்சாட்சியாக மரிக்கவும் முன்வந்தனர். இவ்வாறு புதிய கிறிஸ்தவர்களின் வழியாக இறைவன் பல அரும்பெரும் செயல்களை ஆற்றினார். இதனால் பட்டிதொட்டியெல்லாம் கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது.

1663-இல்  தென்காசி பாளையம் முதல் மீன் குளம் வரை 252 பேர் திருமுழுக்குப் பெற்றனர். 1665-இல் தந்தை பல்தசார் தென்காசி, திருநெல்வேலி, பாளையம், மாரந்தை பகுதியில் 485 பேருக்குத் திருமுழுக்கு வழங்கினார், இவர்களில் 20 பேர் நாயக்கர்கள் ஆவர். தங்கள் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்ட யோகிகள் கிறிஸ்தவ மிஷனரிகளை விரட்ட நாள்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். ஞானப்பிரகாசம், பீட்டர், தாமோதராஜ், மெய்யப்பன் போன்ற உபதேசிமார்கள் இப்பகுதியில் சிறப்பாக நற்செய்திப்பணி ஆற்றினர். சாந்தாயி என்ற மற்றொரு பெண் கயத்தாறு வெள்ளாளர்கள் மத்தியில் ஆன்ம வேட்கையுடன் மறைப்பணியாற்றிப் பலர் கிறிஸ்தவராகிடத் துணை நின்றார்.

காமநாயக்கன்பட்டியில் கிறிஸ்தவத்தின் எழுச்சி

கி.பி. 1688-ஆம் ஆண்டறிக்கையில் காமநாயக்கன்பட்டியின் பெயர் முதல் முறையாக வருகின்றது. புனித அருளானந்தர் திருவருள்சாதனங்களை வழங்குவதற்காக அடிக்கடி இங்கு வந்து சென்றார். 1700-களில் மதுரைக்குத் தெற்கே காமநாயக்கன்பட்டி மற்றும் வடக்கன்குளம் புகழ்பெற்ற மறைத் தளங்களாகத் திகழ்ந்தன.

தந்தை போர்கிஸ் மற்றும் நான்கு உபதேசிமார்கள் 40 நாள்கள் திருநெல்வேலி சிறையில் வாடினர். தந்தை புசே, இராணி மங்கம்மாளைச் சந்தித்து விடுதலைக்கு உதவி தந்தை போர்ச்சிஸை வடக்கன்குளத்திற்கு அனுப்பினார். 1708-1711 ஆகிய ஆண்டுகளில் தந்தையர் பெர்னார்டு தெ சா மற்றும் லூயி நட்டால் 1000க்கும் மேற்பட்டோருக்குத் திரு முழுக்குத் தந்தனர். இந்நாள்களில் தந்தை வீரமாமுனிவர் குருக்கள்பட்டி மற்றும் காமநாயக்கன்பட்டியில் பணியாற்றினார். உலகநாதன் கயத்தாறு பாளையக்காரராக இருந்தபோது கிறிஸ்தவர்களைச் சொல்லொண்ணா துன்பத்திற்கு உள்ளாக்கினான். ஆலயத்தை இடித்துத் தள்ளி உபதேசிமார்களை அவமானப்படுத்தினான். இத்தனை இடர்ப்பாடுகளின் மத்தியிலும் 1714-இல் 575 பேர் திருமுழுக்குப் பெற்றனர்.

சேந்தமரம் இந்து சாணார்களுக்குக் கிறிஸ்தவச் சாணார் பெண்களை மணமுடிக்க வேண்டும் என அவ்வூரின் தலைவர் கட்டளை பிறப்பிக்க, அதைக் கிறிஸ்தவர்கள் எதிர்த்து ஒரு வழக்குத் தொடுத்தனர். 1716-இல் தந்தை பிரான்தோலினி ஆண்டுத் திரு விழாவைக் கொண்டாட சேந்தமரம் புனித பேதுரு - புனித பவுல் ஆலயத்திற்கு வந்தார். அப்போது பெண்கள் பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துகொண்டு தங்களுக்கு நேர்ந்த கதியைச் சொல்லிக் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை மரியன்னையின் சுரூபத்திற்கு முன்பாக அழைத்துச் சென்று அவர்களின் வழக்கு வெற்றி பெறஆவே மரியாஎன அழைத்துக் கண்ணீரோடு செபிக்கச் செய்தார். இரவு முழுவதும் செபித்தனர்.

மறுநாள் கிறிஸ்தவர்கள் சார்பாக அவ்வழக்கு வெற்றி பெற்றது. கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்திய உலகநாதன் மிகவும் நோய்வாய்ப்பட்டு அரண்மனையிலிருந்து அமைச்சர்களால் விரட்டியடிக்கப்பட்டு, உபதேசிமார் வீட்டில் தஞ்சமடைந்தான். அவனைக் கிறிஸ்தவர்கள் பரிவுடன் நடத்தினர். இவ்வாறு கிறிஸ்தவத்திற்கு எதிராகச் செயல்பட்ட மூன்று நபர்கள் கொடூரமான சாவினைச் சந்தித்தனர். 1727, 1728 ஆகிய ஆண்டுகளில் தந்தையர் அலெக்சிஸ் பின்டோ, புராஸ்பர் ஜீலியானி 950 பேருக்குக் காமநாயக்கன்பட்டியில் திருமுழுக்களித்தனர்.

1729-இல் காமநாயக்கன்பட்டி கிராமம் மற்றும் ஆலயத்தில் திருட வந்தனர். அப்போது ஆலயத்தில் இருந்த கிறிஸ்தவர் கண்ட நிகழ்வு: உள்ளே நுழைந்த திருடன் புனித மரியன்னை சுரூபத்தை எடுத்துச் செல்ல கையில் எடுத்தான். உடனே அவனுக்குப் பார்வை போயிற்று. எனவே, அச்சுரூபத்தைப் பீடத்திலே வைத்துவிட்டுச் செய்வதறியாது திகைத்துப் போய் தனக்கு உதவிடுமாறு கத்திக்கொண்டே தட்டுத்தடுமாறி ஆலயத்தை விட்டு வெளியேறினான். 1731-ஆம் ஆண்டு தகவலின்படி மறுசீரமைக்கப்பட்ட காமநாயக்கன்பட்டி ஆலயம் புனித விண்ணேற்பு அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்ற தகவலை வீரமாமுனிவர் தருகின்றார். 1746-இல் சேதுவாய்க்கால் மற்றும் இராஜபாளையம் அருகேயுள்ள வாணியம்பட்டியில் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. 1729-1756 வரையுள்ள 25 ஆண்டுகளில் காமநாயக்கன்பட்டி, குருக்கள்பட்டி, கயத்தார் மற்றும் சேந்தமரம் பகுதிகளில் 5592 பேருக்குத் திருமுழுக்கு கொடுக்கப்பட்டது.

(தொடரும்)

Comment