No icon

வாழ்க்கையைக் கொண்டாடு - 10

தொடர்புகள் நம்மை மேம்படுத்தட்டும் (The Networking)

ஒரு பொழுதும் துன்பமாய் மாறாத ஒன்று உண்டு. அது நமது நற்செயல் மட்டுமே! அடடா, கேட்பதற்கே நன்றாக இருக்கிறதா? செயலில் காண்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்தானே? ‘அறன் வலியுறுத்தல்எனும் அதிகாரத்தில், இக்கருத்தை வலியுறுத்துகிறார் நம் திருவள்ளுவர். ‘பிறருக்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான்’- அன்னை தெரசா. இதுவும் நன்றாக உள்ளதல்லவா!

சரி, எதற்காக இவையெல்லாம் இங்கே? இவையனைத்தும் நமது நட்பு வட்டத்தை மேம்படுத்த, அரணாக நிற்க வேண்டிய அறன் சார்ந்த கருத்துகள். நாம் எதையும் தனித்துச் செய்ய முடியாது. நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சிலரது ஒத்துழைப்பும், உறுதுணையும் இருந்தால்தான் அது சாத்தியமாகும்.

காலையில் எழுந்ததும் பல் துலக்க நாம் எடுக்கும் பற்பசைக்குப் பின் எத்தனையோ பேர்களின் உழைப்பும், உறுதுணையும் இருக்கத்தானே செய்கிறது. ஆதலால்தான் சொல்கிறேன், நம் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒன்றோடு தொடர்பு உள்ளதாகத்தான் இருக்கும்.

தனித்து இயங்கும் ஆற்றலே நமக்கு இல்லையா? நமது எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் மட்டும்தான் நமக்கு உரித்தானது. அதைச் செயலாக மாற்ற எண்ணற்ற பேர்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. அந்த ஒத்துழைப்பிற்கு நமக்குத் தேவை ‘Network’ என்று அழைக்கப்படும் தொடர்புகள்.

அவனுக்குத் தெரியாத ஆள்களே கிடையாதுஎன நாம் ஒருவரைப் பார்த்து மெச்சுவது அவரிடம் உள்ள அசாத்திய தொடர்புகளை வைத்துதான். இது யாரோ தனிப்பட்டவருக்கு மட்டும் இயற்கை வாரி வழங்கியதல்ல. இது அவரவரின் தனித்தன்மை மற்றும் அணுகுமுறையின் அடிப்படையில் உருவாக்கி, பெருக்கிக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியானால் இது எனக்கும் சாத்தியமா? ‘ஆமாம்என்று சொல்வதைத் தவிர, வேறென்ன சொல்வது?

நானுண்டு, என் வேலையுண்டு என இருக்கிறேன்; எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க’,‘என்னைய விட என்ன பெருசா அவனுக்குத் தெரியும்?’, ‘எனக்கு இப்ப இருக்குற வளர்ச்சியே போதும். எதுக்கு கண்டவுங்ககிட்ட போயி வழிஞ்சு பேசணும்?’, ‘அவனவன் உயர்வு அவனவன் விதி’, ‘இத்தன பேர தெரிஞ்சு என்ன பெருசா கிழிக்கப் போறோம்?’ இப்படியெல்லாம் உங்களுக்குத் தோன்றுகிறதா? இதில் ஒன்றும் குற்றமில்லை. இயலாமையின் வெளிப்பாடு என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். ‘மேலே வரவேண்டும்எனும் எண்ணம் உங்களுக்குள்ளும் இருக்கிறது. உங்களை அறியாமலே நீங்கள் உங்களுக்குப் போட்டிருக்கும் மனத்தடைதான். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து விட்டு, சிறகு விரித்த பறவையாகப் பறப்போம்.

தொடர்புகளை மேம்படுத்த எண்ணற்ற வாய்ப்புகள் சமூக வலைதளங்களில் உள்ளன. அதில் எதைத் தேர்ந்தெடுத்தால் நல்லது?

எது உங்கள் வளர்ச்சிக்கும், கொள்கைக்கும், அறன் சார்ந்த எண்ணங்களுக்கும், உங்களது மதிப்பீடுகளுக்கும் சரிப்பட்டு வருகிறதோ அதெல்லாம் நல்லதுதான்.

தொடர்புகளை மேம்படுத்த இரண்டு வழிகள் உள்ளன:

1. நீங்கள் தொடர்புகளைத் தேடிச் செல்வது

2. தொடர்புகள் உங்களைத் தேடி வருவது

தொடர்புகளைத் தேடி நாம் செல்வதென்பது, நாம் வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளோம் என்று அர்த்தம். முயன்று உருவாக்கி அதை நம்பிக்கைக்கு உரியதாக மாற்றுவதன் மூலம், அது நிலைபெறும் தன்மைக்கு மாறும். இதன் மூலம் நாம் மென்மேலும் வளர்ச்சியினை அடையலாம்.

தொடர்புகள் நம்மைத் தேடி வருகிறதென்றால், நாம் உயர் நிலையில் இருக்கிறோம் என்று அர்த்தம். ஈர்ப்புள்ள காந்தம் எல்லாவற்றையும் ஈர்க்கும் என்பதற்கிணங்க, மாஸ்லோ கோட்பாட்டின்படி, தனித்த நிலைக்கு (Self Actualization) நாம் சென்று விட்டால், அனைத்தும் நம்மைத் தேடி வரும். இந்த

நிலையை அடைந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ‘இவர் எனக்கு நெருக்கம்எனச்சொல்லி, நம் பெயரைக் கெடுக்கும் சில தொடர்புகள் நம்மோடு ஒட்டிக்கொள்ள முயற்சிக்கும். பார்த்து, சூதானமாக அவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

அப்படியானால் நாம் தனித்திருக்க வேண்டுமா? இல்லையில்லை... தனித்தன்மையோடு இருந்தாலே போதும், எல்லாம் நம் வழிக்கு வரும்.

தொடர்புகளை ஏன் நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்?

  •  கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள ஓர் அருமையான வழி.
  • புதிய வாய்ப்புகளுக்கான ஒளி.
  •  நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை புடம்போட ஒரு வாய்ப்பு.
  •  நமது தகுதி (வேலை சார்ந்து) என்ன என்பதைக் கண்டுணரலாம்.
  •  சமூகத்தில் உயர் நிலையில் இருப்போரின் ஆதரவு.
  •  நமது தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க.
  •  நம்மை நாமே அடுத்த நிலைக்கு மேம்படுத்த.

ஒருவர் எவ்வாறு இறந்தார் என்பதை விட,எவ்வாறு வாழ்ந்தார் என்பதே சிறப்பு. அந்தச் சிறப்பினை அடைய, நமது தொடர்பு எனும் நட்பு வட்டம் எப்படி, எவ்வாறு இருக்க வேண்டும் எனும் தேடல்கள் வருகின்றனவா? சரி, இந்தத் தொடர்புகளை எப்படியெல்லாம் மேம்படுத்தி நம்மை நிலைநிறுத்திக்கொள்வது எனும் ஆவல் உங்களுக்கு இருக்கிறதா? அதைப் பற்றி அடுத்த வாரம் பேசுவோம்.

தொடர்ந்து பயணிப்போம்...

Comment