21.03.2021 - கிரீஸ் டப்பாக்கள்!- Fr. Kudanthai Gnani
- Author --
- Tuesday, 23 Mar, 2021
கிரீஸ் டப்பாக்கள்!
அருள்பணியாளர்கள் சிலர் குருத்துவ உடையுடன், யூடியூப் வலையொளிகளிலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் ‘தமிழ் தேசிய கிறித்தவர் இயக்கம்’ என்ற பதாகையின் கீழ், தமிழக ஆயர் பேரவைக்கும் ஆயர் பெருமக்களுக்கும் பெரும்பான்மை கிறிஸ்தவர்களுக்கும் எதிரான குறுகிய அரசியல் நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு களமாடி, கிறிஸ்தவர்களையும் ஏனைய சிறுபான்மையினரையும் ‘தமிழ் தேசியம்’ என்ற போர்வையில் ‘நாம் தமிழர்’ ஆதரவு என்ற அரசியல் நிலைப்பாட்டுடன் இத்தேர்தல் காலத்தில் குழப்புவதை நாம் அறிவோம். இயக்கம் சார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்கு அருள்பணியாளர்களுக்கு உரிமை உள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ‘இயக்கம்’ என்ற போர்வையில் ‘கட்சி’சார்ந்த அரசியலை பொதுவெளியில் முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு உரிமையில்லை என்பதை இங்கே ஒப்புக்கொள்ள வேண்டும்.
‘தலைமை ஒருங்கிணைப்பாளர்’ அடையாளத்தோடும் ‘மாநில ஒருங்கிணைப்பாளர்’ ‘கொள்கை பரப்புச் செயலாளர்’ என்ற போர்வையிலும் அவர்கள் குருத்துவ உடையுடன் பொறுப்பின்றி களமாடி, அதுவும் மழையில் பூத்த காளான்போல தேர்தல் சமயத்தில் ஒரு புதிய அமைப்பின் கீழ், மின்மினியாய் தோன்றுவது அறமல்ல. ஏற்கெனவே பல்வேறு அமைப்புகளில் உறுப்பினர்களாக இருந்து, தாம் சார்ந்திருந்த இயக்கங்களையெல்லாம் யூதாசைப் போல முதுகில் குத்திவிட்டு, இப்போது தலையில் கீரிடம் சூட்டிக்கொண்டு, செம்மறித்தோல் போர்த்திய ஓநாய்களைப் போல, கிறிஸ்தவர்களையும் ஏனைய மதச் சிறுபான்மையினரையும் வாக்குக்காக வேட்டையாடுவது நியாயமுமல்ல.
ஒரு கருத்தியலை, ஒரு கால இடைவெளியில் பரவலாக்கம் செய்து, பரந்துபட்ட அளவில் ஆதரவைத் திரட்டி, இயக்க அரசியலை வளர்த்தெடுத்து, பின்னர் கட்சி அரசியலை முன்னிலைப்படுத்தியிருந்தால் ஒருவேளை சகித்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு மாறாக, கட்சி அரசியலை முன்னிலைப்படுத்துவதற்காக, இயக்க அரசியல் என்ற போர்வையில் கருத்து வேள்வி நடத்துவதும், கத்தோலிக்கத் தலைமையை பொதுவெளியில் கேளிக்கும் சீண்டலுக்கும் உள்ளாக்குவதும் கிறிஸ்தவ அறமல்ல. கிறித்தவ வாழ்வுரிமை இயக்கத்தை பலவீனப்படுத்துவதும் நியாயமும் அல்ல.
‘நாம் தமிழர்’ என்பது ஒரு கருத்தியல் சார்ந்த கட்சி-அரசியல் அமைப்பு. அதன் தலைமைக்கும் அதன் கொள்கைக்கும் ஒரு குருவானவர் தனிப்பட்ட விதத்தில் ஆதரவு-எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள தார்மீக உரிமையுண்டு. இது குருக்களின் ஏனைய கட்சி சார்ந்த கொள்கைகளுக்கும் பொருந்திப் போகும். கிறிஸ்தவர்களை அரசியல்படுத்தவேண்டும் என்று இரு பத்து ஆண்டுகளாக நம் எல்லாருடைய மத்தியிலும் தோன்றியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நாம் பல்லக்கு தூக்கியே நம் தோள்கள் மரத்து போய் உள்ளன. ஆகையால்தான் அரசியல் தலைமைத்துவமிக்க பல்வேறு கிறிஸ்தவப் பொதுநிலையினர் பல்வேறு இயக்கங்களிலும் கட்சிகளிலும் சார்பு கட்சி அரசியலையோ சுய நிலைப்பாடுமிக்க அரசியலையோ மேற்கொள்கின்றனர். இதனை நன்றி பாராட்டி ஊக்கப்படுத்துகிறோம். கிறித்தவ வாழ்வுரிமை இயக்கத்தை முன்னிலைப்படுத்துகிறோம்.
தமிழக ஆயர் பேரவை கடந்த ஆண்டுகளில் ஒருபோதும் ஒரே ஒரு கட்சி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததில்லை; மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிப்பது என்று அறிவித்தாலும், இந்தக் கட்சிக்கு, இந்தச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று ஒருபோதும் தெருமுனை பிரச்சாரம் செய்ததில்லை. மந்தையைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கே அதனை விட்டுவிடுகின்றனர் என்பது ஊரறிந்த உண்மை.
தான் ஒரு கிறித்தவர் இல்லை என்றபோதே நாம் தமிழர் செபாஸ்டியன் சீமானுக்கு எதிராக திருஅவை எதிர்வினையாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் பாசறையில் கிறிஸ்தவர்களின் இறைநம்பிக்கைக்கும் நற்கருணைப் பக்திக்கும் எதிராக பேசிய போதே, ‘இவரை எவரும் தீர்ப்பிடவில்லை’.
காலப் போக்கில் ‘வீரத்தமிழர் முன்னணி’ என்ற பெயரில் வேலை கையிலெடுத்தபோதுதான், ‘முருகன் என் முப்பாட்டன்’ என்று மதம் சார்ந்து அரசியல் சித்தாந்தம் எடுத்தபோதுதான், ‘ச்சி..ச்சீ இப்பழம் புளிக்கிறது’ என்ற பாணியில் பெரும்பாலான கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் நிராகரிக்கத் தொடங்கினர். முஸ்லீம்களும் ‘நாம் தமிழர்’ என்ற போர்வைக்குள் சிறைப்படவில்லை. ஒரு கட்சியின் கொள்கையே மதம் சார்ந்தும் வழிபாடு சார்ந்தும் வரையறுக்கப்பட்டபோதே, சிறைப்பட்டவர்கள் தங்கள் சிறகுகளை விரிக்கத் தொடங்கிவிட்டனர். எதேச்சதிகார முறையில், உதடுகள் ஒட்டும் ‘நாம்’ என்பது மறைந்து, உதடுகள் கூட ஒட்டாத ‘நான்’ என்ற போதே ‘கிரிஸ் டப்பாக்கள்’ மட்டுமே அங்கே மிஞ்சியிருக்கின்றன என்பது தெளிவானது. ‘காங்கிரஸை கருவறுப்போம்; திமுகவை எதிர்ப்போம்’ அம்மாவின் மடியில் அமர்ந்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் பிரச்சாரம் செய்தபோதே, இவரின் ‘அதர்மயுத்தம்’ என்பது அம்பலமானது. அவரோடு இணைந்து பயணித்த அத்தனை இயக்கங்களும் அதன் தலைவர்களும் ‘துண்டைக் காணோம்! துணியைக் காணோம்’ என்று விலகிக் கொண்டனர்.
ஆயர்பேரவை என்பது ஓர் வழிகாட்டும் அமைப்பு. ஆழ்ந்து சிந்தித்து, சாதக பாதங்களை அலசி ஆராய்ந்து, ஆயனுக்குரிய அக்கறையுடன், மந்தையின் நலம் கருதி உரிய மேய்ச்சல் நிலத்திற்கும் நீர்நிலைக்கும் மோசேயைப் போல வழிநடத்தும் அமைப்பு. விடுதலைப் பயணத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமளித்து காஸாவிலும் மெரிபாவிலும் மோசே சந்தித்த எதிர்ப்பைப் போல அனைத்தையும் துணிவுடன் எதிர்கொள்ளும் வலிய கூட்டமைப்பு. ஆயர்பேரவைத் தலைவருக்கு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் தனிப்பட்ட விதத்தில் எழுதிய கடிதத்தை பொதுவெளியில் விடும்போதே அவர்களின் குதர்க்கமான நோக்கம் வெளிப்பட்டுவிட்டது.
‘பெரும்பான்மை’ என்ற பெயரில் மதச்சார்பு நிலையெடுத்துள்ள பாஜகவுக்கும் ‘முருகன் என் முப்பாட்டன்’ என்கிற நாம் தமிழருக்கும் பார தூர வித்தியாசமில்லை. மோடி உட்பட வெற்று வார்த்தைகளை விதைப்பவர்களை தமிழகத்திலும் தமிழீழத்திலும் எவரும் நம்பமாட்டார்கள். குல தெய்வ கோயிலில் தன் பிள்ளைக்கு காது குத்தும்போது கூட, புரோகிதரைக் கொண்டு சமஸ்கிருத மந்திரம் ஓதச் சொன்னவரை, உண்மைத் தெரிந்தவர்கள் ‘ஓரமாக போய் விளையாடச் சொல்லவே’ விரும்புகின்றனர். ‘மொழி’ என்ற போர்வையில் அன்று நுழைந்தவர்கள் இன்று மதத்தையும் சாதியையுமே நம்பி அரசியல் செய்கின்றனர்.
‘வேலை‘ப் பற்றி புளங்காகிதம் அடையும் அவர், குல்லாவையும் சிலுவைiயும் கண்டுகொள்வதில்லை. நாம் தமிழர் கொள்கையில் கிஞ்சித்தும் மாறுபடாத மன்சூர் அலிகானின் பிரிவும், அவர் நிறுவிய கட்சியும்கூட முஸ்லீம் வாக்குகளைப் பிரிப்பதற்கான குல்லா அரசியல்தான் என்பதை அனைவரும் அறிவர். அந்த வகையில் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிப்பதற்கான குயுக்தியான அமைப்பே தமிழ் தேசிய கிறித்தவர் இயக்கம். மேலும், பாசிசத்திற்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணிக்கு கிறிஸ்தவ வாக்குகள் போய்விடக்கூடாது என்று வாக்குகளைப் பிரிப்பதற்காகவே கிறிஸ்தவ வேட்பாளர்களை ‘நாம் தமிழர்’ என்ற போர்வையில் நிறுத்துவதும் வெள்ளிடைமலை.
இவ்வகையில் இந்த இரு தலைமை ஒருங்கிணைப்பாளர்களுமே ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்டு, இடுக்கமான வாயிலைக் கொண்டிருக்கின்றனர். முதலில் அவர்கள் நுழையட்டும்; பின்னர் மற்றவரை நுழைக்கட்டும்.
இத்தேர்தல் பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலானது. இதில் நாம் வெற்றிப்பெற்றே ஆக வேண்டும்.
‘நாம்’ என்ற அடைமொழியுடனான இன அடையாளமும் மத அடையாளமும் சாதி அடையாளமும் பாசிசத்தின் மறு வடிவமே. இறையாட்சிக்கு எதிரானதே. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.
Comment