No icon

தூத்துக்குடி மறைமாவட்டம் உதயம்

“முத்துக்குளித்துறை”

திருச்சி மறைமாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்தமுத்துக்குளித்துறைமறைவட்ட முதன்மைக் குருவின் தலைமையில் சுதேசிக் குருக்களால் நிர்வகிக்கப்பட, திருஅவை ஒரு தனித்தளமாக அமைக்கப்பட்டது.

தொடக்க நிலைத் தயாரிப்புகள்

திருச்சி மறைமாவட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்ட முத்துக்குளித்துறைப் பகுதியில், கீழ்காணும் வகையில் மொத்தம் 18 பங்குகள் நிறுவப்பட்டிருந்தன.

- ஆயர் அலெக்சிஸ் கானோஸ் ஆட்சியில்-7 பங்குகள்

- ஆயர் ஜான் பார்த்தே ஆட்சியில்-8 பங்குகள்

- ஆயர் பெசாந்தியர் ஆட்சியில்-3 பங்குகள்

முத்துக்குளித்துறையின் 18 பங்குகளில் கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ரோம் நகரிலுள்ள திருஅவையானது முத்துக்குளித்துறையையும், அதன் உள்நாட்டையும் ஒரு புதிய மறைமாவட்டமாக நிறுவ முன் வந்தது.

புதிய மறைமாவட்டம் தோற்றுவிக்கும் முயற்சியில் முதலாவதாக, முத்துக்குளித்துறையின் 18 பங்குகளில் சுதேசி குருக்கள் பங்குத் தந்தையராக நியமிக்கப்பட்டனர்.

அவ்வாறு நியமிக்கப்பட்ட சுதேசி குருக்கள்

1. சங். மரிய சூசைநாதர் (தூத்துக்குடி)

2. சங். கஸ்பார் ரோச் (மணப்பாடு)

3. சங். Y. இஞ்ஞாசி (வடக்கன்குளம்)

4. சங். A. ஞானசாமி (பெரியதாழை)

5. சங். அம்புரோஸ் மிசியர் (ஆலந்தலை)

6. சங். பெரிய நாயகம் (வீரபாண்டியன் பட்டணம்)

7. சங். J. ஜெகநாதர் (வீரபாண்டியன் பட்டணம்)

8. சங். லூயிஸ் ஞானபிரகாசம் (இடிந்தகரை)

9. மொன்சிஞ்ஞோர் D. சுவாமிநாதர் (வேம்பார்)

10. சங். P.J. மரியதாஸ் (வேம்பார்)

11. சங். J.S. லூர்து (கூட்டப்புளி)

12. சங். அடைக்கலநாதர் (தருவைக்குளம்)

13. சங். F.X. சிங்கராயர் (சாத்தான் குளம்)

14. சங். அந்தோனி பர்னாந்து (உவரி)

15. சங். K. அருள்சாமி (கள்ளிகுளம்)

16. சங். C. சிலுவை நாதர் (காவல் கிணறு)

17. சங். பெஞ்சமின் சூசைநாதர் (பழைய காயல்)

18. சங். ஸ்தனிஸ்லாஸ் ராஜா (அழகப்பபுரம்)

19. சங். S. மரியதாஸ் (வேம்பார்)

20. சங். A. அடைக்கலம் (பிரகாசபுரம்)

21. சங். A. கௌசானல் சே..

22. சங். T. மிக்கேல்

மேற்கூறிய 18 பங்குகளும் ஒரு தனி மறைவட்டமாக (Vicariate) இணைக்கப்பட்டு, மறைவட்ட முதன்மைக் குருவாக (Vicar-Forane) சங். A.M.J சூசைநாதர் (also called as Fr. Maria Louis) நியமிக்கப்பட்டார். அவ்வாறு, புதிய  மறைமாவட்டத்தை நிறுவுவதற்கான அனைத்து தொடக்க நிலைத் தயாரிப்புகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.

மறைவட்ட முதன்மை குரு நியமித்தல்

கி.பி. 1921 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் A.M.J சூசைநாதர் முத்துக்குளித்துறையின் மறைவட்ட முதன்மைக் குருவாக நியமிக்கப்பட்டார். கி.பி. 1922 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் சங். J.M. லூயிஸ் ஞானப்பிரகாசம் அதிக அதிகாரம் மற்றும் கூடுதல் பொறுப்புடன் பிறக்கப் போகும் மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாக (Vicar General) நியமிக்கப்பட்டார்.

கீழ்காணும் 3 மறைவட்டங்களும் அவற்றின் மறைவட்ட முதன்மைக் குருக்களும் நியமிக்கப்பட்டனர்

1. தூத்துக்குடி மறைவட்டம் - சங். J. ஜெகநாதர்

2. மணப்பாடு மறைவட்டம் - சங். மரிய சூசைநாதர்

3. வடக்கன்குளம் மறைவட்டம் - சங். Y. இஞ்ஞாசி

புதிய மறைமாவட்டம் பிறக்கவிருப்பதை வரவேற்கும் வகையில், கி.பி. 1923 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் மாலை, மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு சங். J.M. லூயிஸ் ஞானப்பிரகாசம் சுவாமிகள் தூத்துக்குடி திரு இருதயங்கள் ஆலயத்திற்கு ஆடம்பர ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

புதிய மறைமாவட்டத்தைப் பற்றி

ஏறக்குறைய 386 ஆண்டுகளுக்கு முன்னர், கி.பி. 1535 - 1537 ஆண்டுகளில் நடைபெற்ற பரதவ சமுதாயத்தின் ஒட்டுமொத்த மதமாற்றத்தை மனதில் கொண்ட திருத்தந்தை 11ஆம் பத்திநாதர், தாம் புதிதாக நிறுவும் தூத்துக்குடி மறைமாவட்டத்தைQuea Catholic Nominiஎன்ற தனது அப்போஸ்தலிக்க மடலில் (12.06.1923) “முத்துக்குளித்துறை என்று வெகு பொருத்தமாக அழைத்தார்.

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமம் பெற்ற மிக, வண. பிரான்சிஸ் திபூர்சியஸ் ரோச் ஆண்டகை, இலத்தீன் ரீதியின் முதல் இந்திய ஆயர் மட்டுமல்லாமல், அவர் தூத்துக்குடி மண்ணின் மைந்தரும் ஆவார்.

மறைமாவட்ட பங்குகள்

தொடக்கத்தில் முத்துக்குளித்துறையின் கிராமப் பங்குகளும், சில உள்நாட்டுப் பங்குகளும் மட்டுமே தூத்துக்குடி மறைமாவட்டத்தை உள்ளடக்கியிருந்தது. கத்தோலிக்க நாடார் இன மக்கள் அதிகம் வசிக்கும் உள்நாட்டுப் பகுதிகள், திருச்சி மறைமாவட்ட ஆன்மீக பராமரிப்பில் இருந்தன.

தூத்துக்குடி மறைமாவட்டம் நிறுவப்பட்டபோது, மொத்தம் 18 பங்குகளே இருந்தன. இதனை கீழ்காணும் இரண்டு புத்தகங்கள் உறுதிப்படுத்துகிறது.

1. “தூத்துக்குடி மறைமாவட்ட வரலாறு” - ஜார்ஜ் ஜெகதீசன் 1973, தூத்துக்குடி-பக்கம் 154

2. “முத்துக்குளித்துறை முதல் ஆயர் பெருந்தகை ரோச் ஆண்டகை” - வத்திரு. ஜே. லாசர் மோத்தா சே.. - 1981, திருச்சி பக்கம் 24.

ஆனால்Catholic Directory of India 1924” (1924 ஆம் ஆண்டு Catholic Supply Society/ Madras வெளியிட்டது), மறைமாவட்டத்தில் மொத்தம் 20 பங்குகள் என்றும், அந்த கூடுதல் 2 பங்குகளும், புன்னைக்காயல், அணைக்கரை என்றும் பதிவு செய்திருந்தது. ஆக கி.பி. 1924ஆம் ஆண்டு பதிவான தகவல்படி, தூத்துக்குடி மறைமாவட்டம் 20 பங்குகளை கொண்டிருந்தது.

இரட்டை ஆட்சி - பதுருவதோ

கி.பி. 1886 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 23 ஆம் நாளன்று போர்ச்சுக்கல் அரசுக்கும், திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் (Pope Leo XIII, Papacy 1878-1903) அவருக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்படி சிலஇரட்டை ஆட்சி பங்குகள் கோவா மிஷனை (Goa Mission) சார்ந்த மயிலாப்பூர் மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தன.

கி.பி. 1929 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 29ஆம் நாளன்று திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர் (Pope Pius XI Papacy 1922-1939)) வெளியிட்ட Quea ad Spirituale அப்போஸ்தலிக்க மடலின் படியும், அதனால் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் பதுருவாதோ அதிகாரம் காரணமாக மயிலாப்பூர் மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்த 5 பங்குகளும், கி.பி. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 4 ஆம் நாளன்று தூத்துக்குடி மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.

அதனால், தூத்துக்குடி மறைமாவட்டத்தில் அப்போது மொத்தம் 25 பங்குகள் (18+2+5=25) கணக்கில் இருந்தன. வெகு விரைவில், புன்னைக்காயலின் புனித சவேரியார் ஆலயப் பங்கும், புனித மிக்கேல் அதிதூதர் ஆலயப் பங்கும் இணைந்தது. ஆகவே, கி.பி. 1930 ஆம் ஆண்டில், மறைமாவட்டப் பங்குகளின் எண்ணிக்கை 24 என்று அமைந்தது.

தூத்துக்குடி மறைமாவட்டம் தோன்றுவதற்கு முன்னர், ஏற்பட்ட இந்தப் பதுருவதோ அதிகாரம் காரணமாக, முத்துக்குளித்துறையின் 5 முக்கிய கிராமத்து பங்குகளில்:

1. தூத்துக்குடி - பனிமய அன்னை ஆலயம்

2. மணப்பாடு - தூய ஆவி ஆலயம்

3. புன்னகைக்காயல் - புனித மிக்கேல் ஆலயம்

4. வைப்பாறு - விண்ணேற்பு அன்னை ஆலயம்

5. கூடுதாழை - புனித தோமையார் ஆலயம் காணப்பட்டஇரட்டை ஆட்சி (Double Jurisdiction) குறிப்பிடத்தக்கது.

நூற்றாண்டு காணும் மறைமாவட்டம்

கி.பி. 2023 ஆம் ஆண்டில் நூற்றாண்டு காணும் நமது தூத்துக்குடி மறைமாவட்டம் இன்றைய நாளில் 119 பங்குகளைக் கொண்டுள்ளது.

Comment