No icon

தமிழகத்தில் கிறிஸ்தவம்

மறைசாட்சி புனித தேவசகாயம்

அரண்மனைக் கருவூல அலுவலர்

நீலகண்டன் என்பவர் வாசுதேவன் மற்றும் தேவகி அம்மாள் ஆகியோரின் மகனாக 1712 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23 ஆம் நாள் இன்றைய கன்னியாகுமரி மாவட் டம், கிள்ளியூர் வட்டம், நட்டாலம் என்ற ஊரில், தாய் வழி மரபைப் பின்பற்றும் இந்துக் குடும்பத்தில் பிறந்தார். நட்டாலம் தமிழக-கேரள எல்லையில் அமைந்திருப்பதால், இங்கு வாழ்கின்றவர்களால் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. நீலம் என்ற நீல கண்டன், இந்த இரு மொழிகளிலும் புலமைப் பெற்றவராக வாழ்ந்தார். நீலகண்டன் தனது தாய்வழி இனமான இந்து முறைப்படி தனது தாய் மாமனால் வளர்க்கப்பட்டார். நீலகண்டன், சிவன் மற்றும் பத்ரகாளியின் தீவிர பக்தனாக வாழ்ந்தார். வடமொழி மற்றும் வில்வித்தை, வர்மக் கலைகளைச் சிறு வயதிலேயே கற்றுத் தேர்ந்தார். சிறுவயது முதல் தீமைகளை அகற்றி, நல்லொழுக்கத்துடன் தனக்குக் கிடைத்த உயர் கல்வியினாலும், நுணுக்கமான அறிவுத்திறனாலும் சிறந்த மனிதராகத் தன்னை உருவாக்கிக் கொண்டார்.

நீலகண்டனின் குடும்பம் திருவிதாங்கூர் மார்த்தாண்டவர்மா மன்னரின் அரசவையில் செல்வாக்குடன் திகழ்ந்தது. நீல கண்டன் இளம் வயதில் ஒரு போர்வீரனாக தனது பணியைத் துவங்கினார். அதன் பிறகு, பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி திருக்கோவில் அதிகாரியாகப் பணியாற்றினார். இறுதியாக, அரண்மனையில் கருவூல அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். துடிப்பாகவும், விவேகத்துடனும் செயல்பட்ட நீலகண்டன், திருவிதாங்கூர் திவானாகிய இராமையன் தளவாய் என்ற அதிகாரியின் கீழ், மாநிலப் பொறுப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று, உதயகிரி கோட்டையில் பணியாற்றி வந்தார்.

கிறிஸ்தவ சமய அறிமுகம்

அரசர் மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கையைப் பெற்ற டச்சு கப்பற்படை தளபதி எஸ்தாக்கியோ தெலனாய், திருவிதாங்கூர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். எஸ்தாக்கியோ உதயகிரிக் கோட்டையின் பொறுப்பை ஏற்றிருந்தார். அந்நாள்களில் அரசவையில் முக்கியப் பொறுப்புகளுடன் உதயகிரிக் கோட்டையில் வலம் வந்த நீல கண்டன், எஸ்தாக்கியோவின் செயல்பாடுகள், அவரின் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மறை சார்ந்த வழிபாடுகளைக் கண்டு, அவர்மீது பெரும் மதிப்புக் கொண்டார். எனவே, கிறிஸ்தவ மறையைப் பற்றி ஆழமாக எஸ்தாக்கியோவிடமிருந்து அறிந்து கொண்டு, கிறிஸ்துவின்மீது பற்றுக் கொண்டார். ஒருநாள் நீலகண்டன் மிகுந்த கவலையில் இருந்ததைக் கண்ட தெலனாய், அதற்கான காரணத்தைக் கேட்க, அதற்கு நீலகண்டன், தனது குடும்பத்துக்குச் சொந்தமான கால்நடைகள் மற்றும் பயிர் பச்சைகள் அடிக்கடி இழப்புக்குள்ளாகி, பெரும் பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துவதாக வருத்தப்பட்டார். அப்போது, நீல கண்டனிடம் தெலனாய், திருவிவிலியத்தில் வரும் யோபுவின் கதையைச் சொல்லி, கிறிஸ்தவ சமயத்தை அவருக்கு அறிமுகப்படுத்தினார். இவ்வாறு நீல கண்டன் கிறிஸ்துவின்மீது கொண்ட ஆர்வம் அவரைக் கிறிஸ்தவ மறையை ஏற்பதற்கு உந்தித் தள்ளியது.

கிறிஸ்தவத்தைத் தழுவுதல்

நீலகண்டனின் ஆர்வத்தை அறிந்த எஸ்தாக்கியோ, வடக்கன் குளம் பங்குத் தந்தை, இயேசு சபைக்குரு ஜான் பாப்டிஸ்ட் புத்தாரியிடம் அனுப்பி வைத்தார். “எவ்வித வற்புறுத்தலுமின்றி, ஆத்ம தாகத்துடன் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள மனமுவந்து வந்திருக்கிறேன், எனக்குத் திருமுழுக்குத் தாருங்கள்” என நீல கண்டன், அருள்தந்தையைக் கேட்டுக்கொண்டார். இவ்வாறு 1745 ஆம் ஆண்டு, மே மாதம் 14 ஆம் தேதி நீலகண்டன் கத்தோலிக்கத் திருமறையில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டார்.

‘கடவுள் உதவி செய்கிறார்’ என்னும் பொருள்படும் ‘லாசரஸ்’ என்ற பெயரை மாற்றி, தமிழில் ‘தேவசகாயம்’  என்ற கிறிஸ்தவப் பெயரால் அழைக்கப்பட்டார். கிறிஸ்தவ மறைக்குத் தன் மனைவி பார்கவி அம்மாளையும் அழைத்து வந்து, ‘ஞானப்பூ அம்மாள்’ என்ற பெயரில் திருமுழுக்குப் பெறச் செய்தார். தேவசகாயம் அவர்களின் நெருங்கிய உறவினர்களும் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.

தேவசகாயம் கைது செய்யப்படல்

கிறிஸ்தவ மறைக்கு மாறிய தேவசகாயம், அவரது சமூகத்தினரின் கோபத்திற்குள்ளானார். அதிலும் குறிப்பாக, பத்மநாபபுரம் பத்ம நாபசுவாமி ஆலயக் குருக்கள் தேவசகாயத்தைப் பற்றி பல்வேறு அவதூறுகளைப் பரப்பினார். நாயர் குலத்தைச் சேர்ந்த தேவசகாயம், கிறிஸ்தவ மறையைத் தழுவிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்களுடன், சகோதர மனப்பான்மையுடன் உறவாடினார். உயர் குடியைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவத்தைத் தழுவக்கூடாது என்ற அன்றைய திருவிதாங்கூர் அரசாணையை மேற்கோள்காட்டி, மீண்டும் அவரை இந்து மதத்திற்கு வந்துவிடுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால், அவரோ அவற்றைப் புறந்தள்ளினார். மேலும், பலர் கிறிஸ்தவ மறையைத் தழுவவே, அச்சமடைந்த பிராமணர்கள், அரசன் மார்த்தாண்டவர்மனைச் சந்தித்து, தேவசகாயத்தைக் குறித்த தங்கள் அச்சத்தையும், ஆட்சேபனையையும் தெரிவித்தனர். பிராமணர்களைப் பெரிதும் மதித்த அரசன் மார்த்தாண்டவர்மன், பிராமணர்களின் மனம் நோகாதவாறு உடனடியாக தேவசகாயத்தைச் சிறையிலடைக்குமாறு கட்டளையிட்டான்.

தேவசகாயம் கைது செய்யப்பட்டு, அரண்மனைக்கு இழுத்து வரப்பட்டார். அங்கு அவருடைய உறவினர்கள், நண்பர்கள், உடன் அலுவலர்கள் ஆகியோர் கிறிஸ்தவ மறையை விட்டுவிடுமாறு அவரிடம் மன்றாடினர். ஆனால், தேவசகாயமோ மன உறுதியுடன் “கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுவேன்” என்றார். “உண்மையான மறைக்காக என்னுயிரை இழந்தேன் என்றால், எனக்கு விண்ணக வாழ்வு நிச்சயமுண்டு” என்றார். இதனால் சினங்கொண்ட மன்னர் மார்த்தாண்டவர்மன், தேவ சகாயத்தைச் சிறையிலடைக்கக் கட்டளையிட்டார். அச்சிறையானது ஐந்து சான் அளவு உயரமும், ஓர் அடி அகலமும் கொண்டது. அதற்கான நுழைவாயில் இரண்டு சான் உயரத்தைக் கொண்டதாக இருந்தது. இவ்வாறு, ஒரு சிறிய இருட்டறையில் தேவசகாயம் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டார்.  தேவசகாயத்தின் கீழ்ப்படியாமையை அரசத் துரோகமாகக் கருதி, அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தான்.

கொடிய வாதைகள்

தேவசகாயத்தைக் கொல்வதற்கு முன், ஏனைய நாட்டு மக்களை அச்சுறுத்தி எச்சரிக்கும் வகையில், தேவசகாயத்தை எருமை மாட்டின்மீது பின்னோக்கி அமர்த்தி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுத்தில் எருக்கம்பூ மாலை அணிவித்து அவமதித்து, அவரை ஊர் ஊராக பதினாறு நாள்கள் அழைத்துச் சென்று, கேலியும், கிண்டலும் செய்தனர்.  தேவசகாயம் இழுத்துச் செல்லப்பட்ட இடங்களில் எல்லாம் அவரிடம் ஆசி பெற்ற மக்களுக்குப் புதுமைகள் நிகழ்ந்தன. பெருவிளை என்ற இடத்தில் அவரைக் கட்டி வைத்திருந்த பட்டுப் போன வேப்ப மரம் ஒன்று துளிர்விட்டதாக வரலாறு கூறுகின்றது. இந்நிகழ்வினால் தேவசகாயத்தினுடைய புகழ் மக்களிடையே வேகமாகப் பரவியது. இதனால் அச்சமடைந்த அரசன், வெளிப்படையாக அவரைக் கொலை செய்யாமல், இரகசியமாகக் கொலை செய்யுமாறு வீரர்களுக்கு ஓலை அனுப்பினான்.

எனவே, தேவசகாயம் உடல் முழுவதையும் இரும்புச் சங்கிலிகளால் இணைத்து, அவரை ஆலமர விழுதுகள், புளிய மரக்குச்சிகள் மற்றும் முள்செடிகளால் இழுத்துச் சென்ற வீரர்கள் அடித்துத் துன்புறுத்தினார்கள். இதனால் அவரது உடலில் 35 இடங்களில் சதை கிழிந்து தொங்கியது. மீண்டும் அவரைச் சிறைச்சாலையில் அடைத்து வைத்து, மிளகாய் மற்றும் மிளகு கலந்த நீரைக் கொதிக்க வைத்து, அவற்றிலிருந்து வெளிவரும் கார நெடியுடைய நீராவியினால் கொடுமைப்படுத்திய பின், கட்டெறும்புகள் இருக்கும் இடத்தில் அவரைக் கட்டி வைத்தனர். மேலுமாக, அவரது சிறையில் நச்சுப் பாம்புகளையும், தேள்களையும் வீசியெறிந்து துன்புறுத்தினார்கள். மூன்றாண்டு கால சிறை வாழ்க்கையில் ஒருமுறைக் கூட அவரைக் குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும், அனைத்து விதமான வாதைகளையும் உறுதியுடன் தாங்கினார் தேவசகாயம்.

இறைவன் அருளிய நீர்ச்சுனை

தேவசகாயத்தைத் துன்புறுத்திய காலத்தில், புலியூர்க்குறிச்சியில் ஒரு பாறையின்மீது அமர வைத்தனர். அந்நேரத்தில் தாகத்தால் தேவசகாயம் துடித்தார். அப்போது துர்நாற்றம் வீசக்கூடிய நீரை ஓர் உடைந்த பானையோட்டில் படைவீரர் வழங்கினர். ஆனால், அவற்றைக் குடிக்க முடியாமல் தவித்த தேவசகாயம், இறைவனிடம் மன்றாடி, தனது கால் முட்டியினால் அப்பாறையின்மீது மோதினார், அதிலிருந்து நீர்ச்சுனை சுரந்தது. அதைப் பருகி தனது தாகம் தணித்ததாக நம்பப்படுகிறது. இன்று இவ்விடம் ‘முட்டியடிச்சான் பாறை’ என அழைக்கப்படுகிறது.

இவ்விடத்தில் சிறை வைக்கப்பட்டப்போது, படைவீரர் ஒருவர் தன் மனைவியுடன் வந்து, தனக்குக் குழந்தை வரம் வேண்டுமென தேவசகாயத்திடம் ஜெபிக்க மன்றாடினார். அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவே, அவ்வீரர் தேவசகாயத்தை மதிப்புடன் நடத்தினார். இங்கு இவரது கண்காணிப்புப் பணியிலிருந்த படைவீரர்கள் தேவசகாயத்திற்குத் தப்பித்துச் செல்லும் வாய்ப்பை வழங்கினார்கள். இதைப் பற்றி வடக்கன்குளம் பங்குத்தந்தை புத்தாரி மற்றும் எஸ்தாக்கியோ தெலனாய் ஆகியோரிடம் கலந்தாலோசித்தார். அதற்கு அவர்கள் ‘தப்பித்துச் செல்வது கோழைத்தனமாகும், ஆகவே, துணிவுடன் விசுவாசத்திற்காக மறைசாட்சியாக மரணத்தைத் தழுவுவதே சிறந்தது’ என அறிவுறுத்தினர். அவர்களது பதிலால் மகிழ்ச்சியடைந்த தேவசகாயம், மறைசாட்சியாக மரணத்தை எதிர்கொள்ளத் துணிவு கொண்டார். தனது வேதனைகளைக் குறித்து வருத்தப்பட்ட மக்களிடம் இயேசுவின் பாடுகளைக் குறித்துப் பேசினார்.

காற்றாடி மலையில் தேவசகாயம்

புனித தேவசகாயத்தை அடைத்து வைத்திருந்த இடம் செபக்கூடமாக மாறவே, அரசன் அங்கிருந்து அவரை அகற்றி, ஆரல்வாய்மொழிக்கு இழுத்துச் செல்லக் கட்டளை பிறப்பித்தான். பிரம்மாபுரம், மணக்காரா, அப்பட்டுவிளை, பெருவிளை போன்ற இடங்களில் உள்ள மரங்களில் இரவு, பகல், வெயில், மழை என்று பாராமல், ஏழு மாதங்களுக்கும் மேலாக சரியான உணவின்றி கட்டி வைத்து வதைத்தனர். ஒவ்வொரு நாளும் மக்கள் அவர் கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்து சந்தித்து ஆசீர் பெற்றுச் சென்றனர். பலர் இவரது புனிதப்பாடுகளைக் கண்டு கிறிஸ்தவர்களாகினர். மூன்று ஆண்டுகளாகத் தகுந்த உணவு, நீரின்றி கொடுமைப்படுத்தப்பட்ட போதும், அவரது உடல் சீராகவும், பேச்சு தெளிவாகவும் இருந்தது.

மன்னன் மார்த்தாண்டவர்மனின் ஆணையின்படி, திருவனந்தபுரத்திலிருந்து 50 கி.மீ. தூரத்திலுள்ள காற்றாடி மலைப்பகுதிக்குக் கொலை செய்யப்படுவதற்காகச் சங்கிலிகளால் கட்டப்பட்டு, இழுத்துச் செல்லப் பட்டார். ஆரல்வாய்மொழி பூவரசு மரத்தில் கட்டி வைத்து, எவ்வித உணவு, நீரின்றி கொடுமைப்படுத்தப் பட்டார். ஆரல்வாய்மொழி முக்கியமான சந்தைப் பகுதியாக விளங்கியதால் வடக்கன்குளம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் சுற்றுப்புறங்களில் வாழ்ந்தோர் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து சென்றனர். பூவரச மரத்தில் இரவு-பகலென்று பாராமல் வேதனைப்படுத்தப்பட்ட தேவசகாயத்தைக் கண்டு வேதனையடைந்து, ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லிச் சென்றனர். அங்கு வந்து சென்ற மக்களுக்காக தேவசகாயம் செபிக்கவே, பல புதுமைகள் நடை பெற்றன.

தேவசகாயத்தின் மரண தண்டனைக்கு ஏற்பாடுகள் செய்ய வந்த பிராமணர்கள், இங்கு நடப்பதையெல்லாம் கண்டு வெகுண்டெழுந்து, அவரை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்று விடுமாறு அரசனைக் கேட்டுக் கொண்டனர். எனவே, தேவசகாயத்தை காற்றாடி மலை உட்பகுதிக்கு அழைத்துச் செல்ல மன்னன் ஆணையிட்டான். இந்நாள்களில் தனது கணவரைத் தேடி அலைந்த ஞானப்பூ அம்மாள், ஆரல்வாய்மொழியில் பூவரச மரத்தில் கட்டி வைக்கப்பட்ட கணவனைக் கண்டு, அவரது காலில் விழுந்து கதறினார். தனது மனைவியின் கண்ணீரைத் துடைத்து, இக்கொடுமைகளின் முடிவில் நிறைவான, நிலையான விண்ணக வாழ்வு நமக்குண்டு என அவரை ஆறுதல்படுத்தினார்.

மறைச்சாட்சி தேவசகாயம்

வடக்கன்குளம் பங்குத்தந்தை புத்தாரி அவர்களுக்கு எழுதிய பல்வேறு மடல்களில் தனது பாடுகளைப் பற்றி தேவசகாயம் பேசுகின்றார். அதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிலுவையில் அறையுண்ட இயேசுவுக்கும், ஒவ்வொரு சனிக்கிழமையும் புனித கன்னி மரியாவுக்கும் நோன்பிருந்து செபிப்பதாகக் குறிப்பிடுகின்றார். ஆரல்வாய் மொழியில் இருந்தபொழுது மூன்று முறை இரவு நேரத்தில் குருவானவர் இவரைச் சந்தித்து, நற்கருணை வழங்கிச் சென்றார். தான் இறப்பதற்கு முன் நல்லதொரு பாவசங்கீர்த்தனம் செய்து, நற்கருணை பெற்றுக்கொண்டார்.

மன்னனின் ஆணைப்படி 1752, ஜனவரி 14 ஆம் நாள் மக்களனைவரும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நாளில், இரவு வேளையில் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார்.  படைவீரர் ஒருவர் மூன்று குண்டுகளால் தேவசகாயத்தைச் சுட்டார். அவ்வாறு சுட்டப் பிறகும் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததால், மீண்டுமாக இரண்டு குண்டுகள் அவர்மீது பாய்ச்சப்படவே உயிரிழந்தார். துப்பாக்கிக் குண்டுகள் தன்மீது பாய்ந்தவுடனே ‘இயேசுவே என்னை மீட்டருளும்’ என்று கதறினார். ‘இயேசுவே! மாதாவே!’ என்று உச்சரித்தவராக மறைசாட்சியாக மரணத்தைத் தழுவினார்.

படைவீரர்கள் தேவசகாயத்தின் உடலைக் காட்டிலே தீ வைத்து எரித்தனர். தேவசகாயத்தின் மறைசாட்சி மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அப்பகுதி கிறிஸ்தவர்கள் ஐந்து நாள்களுக்குப் பிறகு, எரிந்த உடலின் எஞ்சிய பகுதிகளான அவரது எலும்புகளை எடுத்துச் சென்று, நாகர் கோவில், கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்தனர்.

முதன் முதலில் கொச்சி மறை ஆயர் கிளமென்ஸ் ஜோசப், ‘தேவசகாயம் கிறிஸ்தவ மறைக்காகக் கொல்லப்பட்டார்’ என்ற அறிக்கையை 1756 இல் உரோமைக்கு அனுப்பி, திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார். 2004 ஆம் ஆண்டு, மறைசாட்சி தேவசகாயம் இறை ஊழியராக உயர்த்தப்பட்டு, 2012 ஆம் ஆண்டு, திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இவரை அருளாளர் நிலைக்கு உயர்த்தினார். 2012, டிசம்பர் மாதம் 2 ஆம் நாள், நாகர்கோவில் புனித கார்மேல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கோலாகலமான விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க, தேவசகாயம் அருளாளராக அறிவிக்கப்பட்டார். திருத்தந்தை பிரான்சிஸ், அருளாளர் தேவசகாயம் அவர்களை 2022 ஆம் ஆண்டு, மே 15 ஆம் தேதி, வத்திக்கானில் புனிதராக முறைப்படி அறிவித்தார். இவ்வாறு, இந்தியாவிலிருந்து பொது நிலையினர் ஒருவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார் என்ற பெருமையைத் தேவசகாயம் பெறுகின்றார்.

Comment