No icon

துடிப்புமிக்கக் குழித்துறை மறைமாவட்டம்

குழித்துறை மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்கவிருக்கும் மேதகு ஆல்பர்ட் அவர்களை வாழ்த்துகிறேன். கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியின் மாணவர் என்பதால், இவர் பயின்ற காலத்தில் இவரின் ஆசிரியராக நானும் பணியாற்றக் கிடைத்தப் பெரும் பேற்றினால் மேதகு ஆயரை வாழ்த்தும் தகுதியுடையவன் என்று கருதுகின்றமையால் வாழ்த்துகிறேன்.

நான் பணியாற்றிய காலத்தில் மாணவர்களாக எம் வகுப்பில் பாடம் கற்ற மாணவர் பலர் தமிழ்நாடு திரு அவையை ஆயர்களாக அலங்கரிக்கின்றமை கண்டு பேருவகை கொள்கிறேன்.

குழித்துறை புதிய மறைமாவட்டமாக அறிவிக்கப்பட்டபோது, முதல் ஆயராகத் தெரிவு செய்யப்பட்ட ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்கள் எனக்கு மிக நெருக்கமானவர். அவரும் எம் வகுப்பில் மாணவராக இருந்தார் என்பதில் பெருமை கொள்கிறேன். எளிமையும், சாந்தமும் மிகுந்த அவர் ஆயராகத் தொடர முடியாமல் போயினும், ஓர் ஆயர் இவ்வளவு எளிமையாக இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் செயல்பட்ட மேதகு ஆயர் ஜெரோம் தாஸ்  அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறோம். மேதகு ஆயர் ஜெரோம் தாஸ் வழியில், பொறுப்பேற்கவிருக்கும் ஆயர் ஆல்பர்ட் அவர்கள் தடம் பதிக்க வேண்டும் என்பதே மறைமாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

துடிப்புமிக்கக் குழித்துறை மறைமாவட்ட மக்கள் ஆழமாக வேரூன்றிய கத்தோலிக்க நம்பிக்கையாளர்கள்; மறை சார்ந்த நம்பிக்கையோடு, சமூக ஈடுபாடும் மிக்கவர்கள்; கற்றறிந்தவர்கள்; வலுவான சமூகக் கட்டமைப்பை உடையவர்கள். பொறுப்பேற்கவிருக்கும் புதிய ஆயர் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட அமைப்பை மேலும் வலுவாக்கும் முயற்சியைச் செய்தால் மட்டுமே போதும்; புதியதாகப் புரட்சியை உருவாக்கப் போகிறோம் என்ற பெரிய முன்னெடுப்புகளைப் பொறுத்திருந்து மேற்கொள்ளலாம்.

மேதகு ஆயர் கற்றறிந்தவர்; நிறைய வாசிப்பவர்; குருமடப் பேராசிரியர்; கேட்போரை மயக்க வைக்கும் மறையுரை வல்லுநர்; அரிய பல நூல்களின் ஆசிரியர்... என்பனவெல்லாம் இவர்தம் பெருமைக்குரிய அம்சங்களாக இருக்கலாம்; கருமாத்தூர் கிறிஸ்து இல்லத்தின் ஓராண்டு பணிக் காலத்திலேயே நூலொன்றைப் படைத்தவர். தொடர்ந்து பல நூல்களைப் படைத்து வருபவர். கோட்டாறு மறைமாவட்டத்தின் அருள்பணியாளராகப் பணியாற்றிய போது, பல்வேறு பொறுப்புகளைச் சிறப்பாகச் செய்தவர்.

இப்பணிகளையெல்லாம் இங்கு நான் பட்டியலிடுவது என் நோக்கமில்லை. இவரின் அனைத்துத் திறமைகளுக்குள்ளும் நான் வியப்பது, இவரின் பங்குப் பணியே. நான் சார்ந்த கோட்டாறு மறை மாவட்டத்தின் பழமையான பங்கு இராசாவூர். நூறு விழுக்காடு கத்தோலிக்கர்களைக் கொண்ட இப்பங்கின் பொறுப்பை இளம் வயதினரான இவர் ஏற்ற போது, ‘இவர் தாக்குப் பிடிப்பாரா?’ என்ற அச்சம் எனக்கெல்லாம் ஏற்பட்டது. திருப்பயணிகள் நிறைய கூடும் ஆலயம். வருவாய் அதிகம் உள்ள ஆலயம். பங்குப் பேரவை பற்றி சிந்திக்கவே முடியாத பங்கு. எப்போதும் மறைமாவட்டத்தின் மூத்த குருக்கள் சிலரே பங்குப் பணியாளராகப் பணியாற்றிய பங்கு.

இப்பங்கின் நிர்வாகம் பொதுநிலையினரால் தன்னிச்சையாக நிர்வகிக்கப்பட்ட காலத்தில், பங்குப் பணியாளராகப் பொறுப்பேற்று, சில அதிசயங்களைச் செய்தார். ஆம்! நிதிக்குழுவை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இராசாவூர் பங்கின் கெட்டி தட்டிப்போன பழமைக்குப் புத்துயிர் அளித்தவர். மூத்த அருள்பணியாளர்களால் சாதிக்க இயலாததை இந்த இளைஞரால் செய்ய முடிந்தது. இச்செய்தியை நான் பல்வேறு இடங்களில் பகிர்ந்துள்ளேன்.

பழமையான, இறுக்கமான பங்கு ஒன்றில் இவர் ஆற்றிய உயர்வான இவரின் முத்திரைப் பணி, குழித்துறை மறைமாவட்டத்திற்கு உறுதியாகத் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பங்குப் பணியாளராக இராசாவூர் பங்கில் இவர் நிகழ்த்திய விந்தையை எப்போதும் பேசுவேன்; இது மிகையல்ல! பங்குப் பணியாளருக்குப் பின் இவர் வெவ்வேறு துறைகளில் விற்பன்னராகத் தேறியிருக்கலாம். அவை இங்கு முக்கியமல்ல; குழித்துறை மறைமாவட்டம் பங்குகளால் நிறைந்த ஒன்று. அம்மறைமாவட்டத்திற்கு இவரே தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.

இராசாவூர் அனுபவம் குழித்துறையை வழி நடத்தும் ஆற்றலையும், அறிவுத் திறனையும் தரும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்! கத்தோலிக்கத் திரு அவை நிறைய உள் முரண்பாடுகளைச் சந்தித்து வருவதோடு, புறத்தாக்குதல்களையும் சந்தித்து வருகின்றது. ஆயர் ஆல்பர்ட் அவர்கள் இச்சவால்களைச் சந்திக்கும் ஆற்றலுடையவர் என்பதிலும், சிந்தித்துத் தீர்வு காண்பார் என்பதிலும் ஐயமில்லை.

ஆசீர் வேண்டி

முனைவர் இ. தேவசகாயம், மதுரை

Comment