No icon

திருப்பீட வழிபாட்டு வெளியீடு

திருத்தந்தையின் கிறிஸ்மஸ் வழிபாட்டு நிகழ்வுகள்

திருத்தந்தையின் கிறிஸ்மஸ் கால வழிபாட்டு நிகழ்வுகள் தொடர்பான தகவல்களைத் திருப்பீடச் செய்தித்தொடர்பகம் டிசம்பர் 01ஆம் தேதி வியாழன்று வெளியிட்டுள்ளது. 2022 டிசம்பர் மாதம் முதல் 2023 ஜனவரி வரையிலான திருப்பீட வழிபாட்டு கொண்டாட்டங்களுக்கான நாள்காட்டியையும் திருத்தந்தை பங்கேற்கும் வழிபாட்டு நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும் திருப்பீடம் வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ் முந்தின இரவான  டிசம்பர் 24 ஆம் தேதி சனிக்கிழமை, உள்ளூர் நேரம் இரவு 7:30 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தைத் தலைமையிலான வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.

உர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீர்வாதம்

டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்மஸ் அன்று, மதியம் 12:00 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாடத்திலிருந்து, உரோம் நகருக்கும், உலகினர் அனைவருக்கும் திருத்தந்தை ஊர்பி எத்  ஓர்பி என்ற சிறப்புச் செய்தி மற்றும் ஆசீரை வழங்குவார் எனவும்டிசம்பர் 31 ஆம் தேதி சனிக்கிழமையன்று, கடந்த ஆண்டுக்கான நன்றி தெரிவிக்கும் வகையில், மாலை 5:00 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் மாலை தெதேயும் என்னும் நன்றி வழிபாட்டையும் தலைமையேற்று நடத்துவார் எனவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

2023 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் காலை 10:00 மணிக்கு கடவுளின் தாயாம் தூய கன்னிமரியாவின் பெருவிழா திருப்பலியையும், ஜனவரி 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10:00 மணிக்கு, இறைவனின் திருக்காட்சிப் பெருவிழா திருப்பலியையும் சிறப்பிக்க இருக்கின்றார் எனவும், ஜனவரி 8 ஆம் தேதி, சிஸ்டைன் சிற்றாலயத்தில் காலை 9:30 மணிக்கு இயேசுவின் திருமுழுக்கு விழாவுக்கான திருப்பலிக் கொண்டாட்டத்திற்குத் தலைமைதாங்கி, குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை கொடுக்க இருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளது.

Comment